பாடல் 142 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான |
கனத்திறுகிப் பெருத்திளகிப் பணைத்துமணத் திதத்துமுகக் கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய் கவட்டையுமெத் தடக்கிமதர்த் தறக்கெருவித் திதத்திடுநற் கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந் தனத்தியர்கட் கிதத்துமிகுத் தனற்குண்மெழுக் கெனப்புவியிற் றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே சலித்தவெறித் துடக்குமனத் திடக்கனெனச் சிரிக்கமயற் சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ புனத்தின்மலைக் குறத்தியுயர்த் திருக்குதனக் குடத்தினறைப் புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா பொருப்பரசற் கிரக்கமொடுற் றறற்சடிலத் தவச்சிவனிற் புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா சினத்தெதிர்துட் டரக்கர்தமைத் திகைத்துவிழக் கணப்பொழுதிற் சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே செருக்கொடுநற் றவக்கமலத் தயற்குமரிக் கருட்புரிசைத் திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே. |
பாரமுள்ளதாய், அழுத்தம் உள்ளதாய், பெருத்ததாய், நெகிழ்ச்சி உள்ளதாய், எழுச்சி உடையதாய், நறு மணம் வீசுவதாய், இதம் தருவதாய், நுனி கரு நிறம் உடையதாய், பரப்புள்ளதாய், மேரு மலைக்கு ஒப்பானதாய், கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அறக் கெருவித்து இதத்திடு நல் கலைச் சவுளித் தலைக் குலவிக் களி கூரும் கபடத்தை மிகவும் உள்ளடக்கியதாய், செழிப்புள்ளதாய், மிக்க ஆடம்பரம் உள்ளதாய், இன்பம் தருமாறு நல்ல ஆடையையும், அணி கலன்களுடன் மேற்கொண்டதாய், இன்பம் மிகும் மார்பகங்களை உடைய பொது மகளிர் கண்களுக்கு இன்பத்துடன் ஈடுபட்டு, நெருப்பில் இட்ட மெழுகைப் போல் பூமியில் தவிப்புண்டு, இழிவான சொல்லுக்கு இடமான பிறவிக் கடலில் (நீந்த முடியாமல்) ஏற்பட்ட சோர்வினால் அலுத்த வெறியில் கட்டுண்ட மனத்தையுடைய கீழ் மகன் என்று (உலகோர்) சிரிக்க, (வேசியர்) மயக்கத்துக்கும் கோபத்துக்கும் வசை மொழிகளுக்கும் இணக்கம் உடையவனாக இருக்கக் கடவேனோ? தினைப் புனத்திலிருந்த (வள்ளி) மலைக் குறத்தியாகிய வள்ளியின் சிறந்த கண்களும், குடம் போன்ற மார்பகங்களும் படும் மணம் வீசும் புயத்தவனே, நல்ல எண்ணத்தை உடைய குக வீரனே, மலை அரசனான இமவானிடம் அன்புடன் (அவனது நாட்டிற்குச்) சென்ற கங்கையைத் தரித்த சடை முடியை உடைய அந்தச் சிவனிடத்து உள்ள ஞானாம்பாளுக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கும் குழந்தைநாதனே, கோபத்துடன் எதிர்த்து வந்த துஷ்ட அரக்கர்களை திகைப்புண்டு விழும்படி, ஒரு நொடிப் பொழுதில் அழித்திட்ட, நல்ல ஒளி வீசும் கைப்படையாகிய வேலை உடையவனே, களிப்புடன் நல்ல தவம் நிறைந்த தாமரைப் பீடத்துப் பிரமனுக்கும், திருமாலுக்கும் அருள் பாலித்தவனே, மதில் சூழ்ந்த திருப் பழனி மலையில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 142 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்ததனத், நல்ல, உள்ளதாய், உடைய, வீசும், இன்பம், மணம், கடவேனோ, பெருமாளே, உடையதாய், மிகவும்