பாடல் 136 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன ...... தனதான |
கலகக் கயல்விழி போர்செய வேள்படை நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள் கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர் கலவித் தொழினல மேயினி தாமென மனமிப் படிதின மேயுழ லாவகை கருணைப் படியெனை யாளவு மேயருள் ...... தரவேணும் இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி குழையத் தழுவிய மேன்மையி னாலுயர் இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனே இதமிக் கருமறை வேதிய ரானவர் புகலத் தயவுட னேயருள் மேன்மைகள் இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே நிலவைச் சடைமிசை யேபுனை காரணர் செவியிற் பிரணவ மோதிய தேசிக நிருதர்க் கொருபகை யாளியு மாகிய ...... சுடர்வேலா நிமலக் குருபர ஆறிரு பார்வையும் அருளைத் தரஅடி யார்தமை நாடொறும் நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே பலவிற் கனிபணை மீறிய மாமர முருகிற் கனியுட னேநெடு வாளைகள் பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே பழனத் துழவர்க ளேரிட வேவிளை கழனிப் புரவுகள் போதவு மீறிய பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே. |
கலகத்தைத் தரும் மீன் போன்ற கண்கள் போர் புரிய, மன்மதனுடைய சேனையாகிய பெண்கள் கூட்டத்தின் நடுவிலும் பக்கங்களிலும் வரும் பாவிகளும், கோபத்தை உடையவர்களும், இனிக்க இனிக்கப் பேச்சுக்களைப் பேசுபவர்களும் ஆகிய வேசியருடன் சேர்ந்திருக்கும் தொழிலே நன்மையானது, இவ்வுலகில் இனிது என்று எனது மனம் இப்படி தினந்தோறும் அலையாதவாறு, உனது கருணை வழியே என்னை ஆண்டு அருள் புரிவாயாக. இலவ மலருக்கு உறவு என்னும்படி சிவந்த அதரத்தை உடைய வள்ளி நாயகி உள்ளம் குழையுமாறு மனம் உருகித் தழுவிய சிறப்பினால், உயர்ந்த புகழைப் பெற்று உயிர்களுக்கு அருள் புரிந்த காதலன் என வேடம் கொண்ட அழகனே, நன்மை மிகுந்த, அரிய வேதங்களைக் கற்ற மறையோர் வேதங்களைச் சொல்ல, அன்புடனே அவர்களுக்கு அருட் செல்வங்களை இசைந்து தருகின்ற அனுகூலனே, மனதைக் கவர்பவனே, முதல்வனே, மதியைச் சடையின் மீது அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானுடைய காதில் பிரணவப் பொருளை ஓதிய குரு மூர்த்தியே, அசுரர்களுக்கு ஓர் ஒப்பற்ற பகைவனாய் வந்த, ஒளி வீசும் வேலனே, பரிசுத்தமான குரு மூர்த்தியே, பன்னிரு திருக்கண்களும் அருளைப் பொழிய அடியார்களை நாள் தோறும் ஒப்பில்லாதவர் என்னும்படி உள்ளம் மிகவும் மகிழும் உரிமை உடையவனே, பலாப்பழங்கள், கிளைகள் மிகுந்த மாமரங்களின் வாசனையுடன் பழுத்த பழங்களுடன், நீண்ட வாளை மீன்கள் பாய்வதால் தனித் தனியே உதிர்கின்ற சோலைகள் பொருந்தி உள்ள தன்மையாலே, வயலில் உழவர்கள் ஏரிட்டு விளைகின்ற வயல்களின் செழுமைகள் மிகவும் மேம்படுகின்ற பழனிச் சிவகிரியின் மீது வீற்றிருந்து அருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 136 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனனத், தனதன, மிகுந்த, உள்ளம், மீது, மூர்த்தியே, மிகவும், என்னும்படி, குரு, மனம், தழுவிய, நாயகி, மீறிய, சோலைகள், பெருமாளே, அருள்