பாடல் 1323 - புதிய பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான |
கருவெனு மாயை உருவினில் மூழ்கி வயதள வாக ...... நிலமீதில் கலைதெரி வாணர் கலைபல நூல்கள் வெகுவித மாக ...... கவிபாடித் தெருவழி போகி பொருளெனு மாசை திரவியம் நாடி ...... நெடிதோடிச் சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவித மாக ...... திரிவேனோ அருளநு போக குருபர னேஉன் அடியவர் வாழ ...... அருள்வோனே அரனிரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி ...... அருள்பாலா வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசு ...... வதிபாலா மிடலுட லாளர் அடரசுர் மாள விடுமயில் வேல ...... பெருமாளே. |
தாயின் கருப்பையிலே மாயையான உருவத்திலே மூழ்கி காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு வந்த பின், உலகிலுள்ள கலை வல்லுனர்களின் பலவிதமான கலை நூல்களைப் பயின்று, அனேக விதமான கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று, பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி நெடும் தொலைவு ஓடி, வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின் மோகத்திலே முழுகி, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள் ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே, அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான சக்தியின் குமரனே, வலிமையான உடலமைப்பு கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு செலுத்திய படையான வேலாயுதத்தை உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1323 - புதிய பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மூழ்கி, உடைய, பெருமாளே, பின்