பாடல் 1317 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன ...... தனதான |
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள் நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள் சீவிக் கோதிமு டித்தள கத்திகள் பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத மாசுற் றேறிய பித்தளை யிற்பணி நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ தேசிக் கானக முற்றதி னைப்புன மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள் சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா தேடிப் பாடிய சொற்புல வர்க்கித மாகத் தூதுசெ லத்தரில் கற்பக தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ டாரத் தோடகி லுற்றத ருக்குல மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே. |
(தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்த) பாசத்தால் அதற்குரிய விலை பேசி முடிவு செய்யும் விலைமாதர்கள். தம்மை விரும்புவர்களின் மனதை மயக்குபவர்கள். கனத்த மலையை ஒத்த மார்பகத்தை உடையவர்கள். மிகவும் பாவ வினையின் காரணத்தால் உடலை எடுத்த வியாபாரிகள். சீவி, ஆய்ந்து முடிந்து கொண்ட கூந்தலை உடையவர்கள். பார்வையாலேயே மோகத்தை எழுப்பும் துஷ்டர்கள். நீங்காத அழுக்கைப் பற்றி ஏறிய பித்தளை ஆபரணங்களை சாம்பலிட்டு பளபளப்பு உறும்படி விளக்கி வைத்துள்ளவர்கள். மார்பிலும் காதிலும் அந்த ஆபரணங்களை அணிந்து தளுக்கு செய்பவர்கள். மிகவும் காமத்தைக் காட்டி, வாய் விரிவாகப் பேசும் பொய்யர்கள். நட்பு செய்து யாரையும் வஞ்சித்து வடிகட்டுபவர்கள். இத்தகையோரின் மாயைச் செயலுக்கே மனத்தைச் செலுத்தி அந்த மாயையுள் நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ? (வள்ளிமலையின்) அழகிய காட்டில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று காவல் இருந்து, (பறவைகளை விரட்ட) கவண் வீசி கல்லைச் சுழற்றுபவள், குளிர்ந்த திருவடியை உடையவள் ஆகிய குறப் பெண் வள்ளி மனம் மகிழும் கணவனே, (தலங்கள் தோறும்) தேடிச் சென்று பாடிய சொல் வன்மை படைத்த புலவராகிய சுந்தரருக்கு இன்பம் தர (பரவை நாச்சியாரிடம்) தூதாகச் சென்ற தந்தை சிவபெருமான் பெற்ற கற்பகமே, தேவர்களுக்கு முதல்வனே, சீகாழியில் திருஞானசம்பந்தராக அவதரித்தவனே, விரும்பி வாழ்த்துவோருடைய உள்ளத்தில் புகும் உத்தமனே, மதுரையில் வைகையில் (வெள்ளம் வர) அணை கட்ட கூலி ஆளாக ஒப்புக் கொண்டு உதிர்ந்த பிட்டமுதுக்காக (பிரம்பினால்) அடி பட்ட சொக்கநாதரோடு, சந்தன மரமும் அகில் மரமும் உள்ள மரக் கூட்டங்கள் மேகம் வரை உயர வளர்ந்து சம்பந்தப்பட்டு நெருங்கிய பழைய பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1317 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, தானத், தோறும், அந்த, மரமும், ஆபரணங்களை, சென்று, பெருமாளே, நேசித், பித்தளை, பாடிய, உடையவர்கள், மிகவும்