பாடல் 1289 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனத்தத் தானன ...... தனதான |
சினத்துச் சீறிய ...... வழிகாணச் சிரித்துப் பேசியு ...... மயல்பூண கனத்துப் போர்செயு ...... முலைதோணக் கலைக்குட் பாதியு ...... மறைவாக மனத்துக் காறுதல் ...... வருமாறு மலைப்பப் பேணியு ...... மிகவாய தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம் சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ தெனத்தத் தாதென ...... எனவேபண் திருத்தத் தோடளி ...... யிசைபாடும் புனத்துக் காவல்கொள் ...... குறமாதின் புணர்ச்சிக் கேயொரு ...... வழிதேடி இனத்துக் காவல ...... ரறியாமல் இணக்கித் தோகையை ...... மகிழ்வோயென் றெனக்குத் தாளிணை ...... யருள்வாய்சூர் இறக்கப் போர்செய்த ...... பெருமாளே. |
சீறிக் கோபித்தும், (வசப்படுத்த) வழி ஏற்பட்டவுடன் சிரித்தும் பேசியும், காம ஆசை உண்டாகும்படியாக, பருத்து விளங்கி காமப் போர் செய்யும் மார்பகம் பாதி தெரியும்படியும், ஆடையுள் பாதி மறையும்படியும் நின்று, (வந்தவருடைய) மனதுக்கு ஒரு ஆறுதல் உண்டாகும் பொருட்டு அவர்கள் மலைந்து மயங்கும்படி உபசரித்தும், பின்பு, மிகுந்த பொருளைக் கொள்ளை அடிக்கின்ற விலைமாதர்களுடைய வஞ்சனைச் சூழ்ச்சியில் அகப்படும் தீய நெறியைத் தவிர்க்க மாட்டேனோ? தெனத்த தாதென என்னும் பண்களை திருத்தமான முறையில் வண்டுகள் இசை பாடுகின்ற தினைப் புனத்தைக் காவல் செய்துவந்த குறப்பெண்ணாகிய வள்ளியை அணைவதற்கே ஒரு வழியைத் தேடி, அந்தக் குறக் கூட்டத்துக் காவலர்களுக்குத் தெரியாமல் மயில் போன்ற வள்ளியை இணங்க வைத்து மகிழ்ந்தவனே, என்றைக்கு எனக்கு உன் திருவடியைத் தந்து அருள் செய்வாய்? இறுதியில் சூரன் மாளும்படியாகச் சண்டை செய்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1289 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வள்ளியை, பாதி, பெருமாளே, தாதென