பாடல் 1282 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பூர்வி கல்யாணி
தாளம் - மிஸ்ர ஜம்பை - 10
தாளம் - மிஸ்ர ஜம்பை - 10
தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான |
என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித் தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச் சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே. |
என்னைச் சூழ்ந்து கட்டியுள்ள வினை எனப்படும் சங்கிலித் தொடரை அறுத்து யான் வெற்றி பெற்று, இன்ப நிலையை அடைந்து, நிரம்பப் பிரியம் கொண்டு, அன்பு பெருகிய நிலையிலே பொற்கிண்ணத்தில் உள்ள பாற்கடல் அமிர்தத்திற்கு நிகரான முடிவான பேரின்பப் பொருள் மீது ஆசையைக் கொள்கின்ற ஆதார நிலையை நீ தந்தருள்வாயாக. முன்பு, சூரனை அழிக்க மனத்தினில் எண்ணி, உருவத்தில் சிறியனாக, பால குமாரனாக, அவதரித்து, சூர சம்ஹார காலத்தில் திந்தி என்ற தாளத்தில் பரத சாஸ்திரப்படி துடி என்னும் கூத்தினை நடனமாடி*, தங்களது பாச பந்தம் அகல்வதற்காக தவநிலையில் இருப்பவர்களது குறைகள் நீங்க, திருஞானசம்பந்தனாக** அவதரித்து தமிழை நிரம்பப் பருகி தேவாரமாக உலகுக்குத் தந்த பெருமாளே.
* முருகன் சிதம்பரத்தில் நடனமாடிய குறிப்பு பல திருப்புகழ்ப் பாடல்களில் வருகிறது.
** சைவக் குரவர் நால்வரில் ஒருவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என்று சுவாமிகள் உறுதியாக நம்புகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1282 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அவதரித்து, நிரம்பப், நிலையை, பெருமாளே