பாடல் 1276 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதனந் தனந்த தனதனந் தனந்த தனதனந் தனந்த ...... தனதான |
வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து வசமழிந் திழிந்து ...... மயல்கூர இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ னிலகுநின் பதங்கள் ...... மறவேனே விரிபரந் தியங்கு முததியுங் கலங்க விடமினும் பிறந்த ...... தெனவானோர் வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி விரைபதம் பணிந்து ...... முறையோவென் றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட உயர்தலங் குலுங்க ...... வருதோகை ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி உலகமும் புரந்த ...... பெருமாளே. |
ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவப்பாகி, முக வட்டம் சிறு வேர்வைத் துளிகளைக் கொண்டதாய், ரத்தினச் சிலம்பு ஒலிக்க, கூந்தலும் சரிந்து கலைய, தன் வசம் கெட்டு இழி நிலையை அடைந்து காமப் பித்து மிக, இரண்டு மார்பகங்களும் குலுங்கி அசைய, இடை நெகிழ்ந்து வருந்த, இனிமையான வாயூறலைப் பருகி, மாதர்களின் தோள்களை இன்பச் சுவையுடன் அணைந்து சேர்ந்து என் புத்தி கெட்டுப் போனாலும், தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன். விரிந்து பரந்து அசைகின்ற கடலும் கலக்கம் உற, ஆலகால விஷம் தான் மீண்டும் பிறந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து, திண்மையும் குலைந்து, உனது நறு மணம் வீசும் திருவடிகளைப் பணிந்து வணங்கி, முறையோ என்று ஓலமிட்டு இன்னது சொல்லுவதென்று அறியாது சிந்தை வாடி நிற்க, வேலைச் செலுத்திய வீரனே, சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசையும்படியாக வந்த தோகை உடைய, ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பெயரை உடைய மயில் மேல் வீற்றிருந்து விளங்கி, உலகத்தைக் காத்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1276 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனந், தனந்த, இரண்டு, உடைய, பெருமாளே, குலுங்கி, பணிந்து, குலைந்து, குலுங்க, சிகண்டி