பாடல் 1268 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனனத் தனதன தனனத் தனதன தனனத் தனதன ...... தனதான |
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர் மலையப் படவிடு ...... வலியாலே வனமுற் றினவளை யினநித் திலமலை வலையத் துகள்வளை ...... கடலாலே விதனப் படுமதி வதனக் கொடியற வெருவிப் பரிமள ...... அணைமீதே மெலியக் கலைதலை குலையத் தகுமினி விரையக் குரவலர் ...... தரவேணும் புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர் புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு புனமெய்க் குறமகள் ...... மணவாளா முதுநற் சரவண மதனிற் சததள முளரிப் பதிதனி ...... லுறைவோனே முதுமைக் கடலட ரசுரப் படைகெட முடுகிப் பொரவல ...... பெருமாளே. |
மன்மதன் கரும்பு வில்லைக் கொண்டு புதிய தாமரை மலர் அம்பை (என் மகள் மீது) பகைத்து எய்ததால் ஏற்பட்ட வலியாலும், அழகு நிறைந்த சங்குகளின் கூட்டமான முத்துக்கள் அலைகளாகிய வட்டச் சுழலில் சிதறி விழுகின்ற, வளைந்துள்ள கடலாலும், துயரப்படும் நிலவு போன்ற முகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற என் பெண் மிகவும் அச்சம் அடைந்து, நறுமணம் உள்ள படுக்கையின் மேல் (தூக்கமின்றி) மெலிந்து போதலும், ஆடையும் தலைக் கூந்தலும் குலைந்து போதலும் தகுமோ? இனிமேல் வாசம் மிக்க குர மாலையை நீ தந்தருள வேண்டும். புதனுடைய தந்தையாகிய சந்திரனை, நான்முக பிரமன், திருமால் (இவர்களின்) எதிரே சூடிக் கொண்டவராகிய சிவபெருமான் தொழுகின்ற திருவடியை உடைய வீரனே, பொருந்திய கையில் வளையல்களை வரிசையாக அடுக்கியவளும், நெருங்கி வளர்ந்துள்ள பயிர்கள் உள்ள தினைப் புனத்தில் இருந்தவளும், உண்மை நிறைந்த குறப் பெண்ணுமாகிய வள்ளியின் கணவனே, பழைய நல்ல சரவணப் பொய்கையில் நூறு இதழ்களைக் கொண்ட தாமரையின் மேலும், பொற்றாமரைப் பதியாகிய மதுரையிலும் வீற்றிருப்பவனே, பழைய கடலில் நெருங்கியிருந்த அசுரர்கள் சேனைகள் கெட்டு அழிய, விரைவில் சென்று சண்டை செய்ய வல்ல பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது நற்றாய் பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், அலை வீசும் கடல் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1268 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், தனதன, போதலும், பழைய, உள்ள, நிறைந்த, பெருமாளே, மன்மதன், உடைய