பாடல் 1261 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானன தான தாத்த தானன தான தாத்த தானன தான தாத்த ...... தனதான |
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த பாணமும் வாளு மேற்ற ...... இருபார்வை பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந் தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச் சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச் சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர தாபம கீப போற்றி ...... யெனநேமி மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட வாசவ னோதி மீட்க ...... மறைநீப மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த ...... பெருமாளே. |
பாவத்தினால் ஏற்பட்ட உடலுடன் வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான், செலுத்துவதற்குத் தயாராக இருக்கும் அம்பையும் வாளையும் போன்ற இரண்டு கண்களையும், கனத்ததும் சந்தனம் பூசியுள்ளதும் அழகு உள்ளதுமான மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் பொருந்திய படுக்கையின் மேலிருந்து ஏமாற்றி இனிமை காட்டும், வஞ்சகமான பேச்சுக்களை உபதேச மொழியாகக் கருதும் பரிசுத்தம் இல்லாத நாயொத்த அடியேனுக்கும் என்னுடைய வினைகள் ஒழிய, பொருந்தி, தொடக்கம் இல்லாததாய், பெருந் தன்மையதான, யான், தான் என்னும் இரண்டும் இல்லாததாய், சுகத்தைத் தோற்றுவிக்கும் ஞான மொழியை உபதேசித்து அருள்வாயாக. வேத நூல்களில் பயிற்சி உள்ள பழைமை உடையவனும், பூணூல் அணிந்தவனுமாகிய பிரம தேவனுடைய தீரம் குலைய வைத்து (ஆணவத்தை அடக்கி), கிரவுஞ்ச மலையை துகைத்து ஒழித்து, கடலில் (மாமரமாக) இருந்த சூரனை வேட்டை ஆடிய வெற்றி வேலைக் கொண்ட கீர்த்திமானே, அரசே, உன்னைத் துதிக்கிறேன் என்று, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும், தேவி விளங்கும் பாகத்தினரான சிவபெருமானும், பல கண்களை உடைய இந்திரனும் புகழ்ந்து, தம்மைக் காக்க வேதங்களை ஓதியும், கடம்பின் அழகிய பூக்களைக் கொண்டு தூவியும் உன்னை வாழ்த்த, தேவயானையை மணம் புரிந்து தேவர்களுடைய சேனைகளைக் காத்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1261 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தாத்த, உடைய, இல்லாததாய், பெருமாளே, வாழ்த்த, வார்த்தை, வேட்டை, காத்த