பாடல் 1260 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் ...... தனதான |
பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப் பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர் பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப் பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங் கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத் திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங் கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத் தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத் திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன் மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத் துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப் பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச் செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே. |
செருக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மனம் உட்கொண்டுள்ள அஞ்ஞான இருள் நன்கு பதிந்து, சந்தேகக் கவலைகளைக் கொண்டு, முஷ்டி யுத்தத்தில் தாக்குவது போல் தாக்குகின்ற, வேல் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மீது நட்பு வைத்து, அவர்களுக்குப் பொருள் கொண்டு வந்து திரட்ட, பரம் பொருளின் மேல் இருக்க வேண்டிய பற்றே இல்லாது போய், பயிரில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டிய களைகளைப் போன்ற, (நான்) கற்றுள்ளதும், (நான்) கட்டியுள்ளதுமான பாடல்களை முழக்கத்துடன் சேர்த்து, ஒரு கனைப்பு கனைத்து (அவர்கள் முன்) உரக்கக் கத்திப் பாடி, உள்ளம் சோர்ந்து குலைகின்ற துன்பம் நீங்கி, உனது திருவடிகளைப் பற்றி முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கூடிட, என்னைக் கடைக் கண்ணால் நோக்கி அருள் புரிவாயாக. வட்ட வடிவமான கடல் வற்றிப் போக அணுகிச் சென்று, அசுரர்கள் சுழன்று உருண்டு ஓடும்படி துரத்தி, அவர்கள் சிறுமைப்படும்படி சண்டை செய்த திருமால், பின்னும், நமக்கு இணையானது என்று மனதில் நினைத்து எட்டி எட்டிப் பார்த்தும் (பன்றி உருவுடன் பாதாளம் வரை சென்று பார்த்தும்) (தோண்டப்பட்ட அளவுக்கும்) அப்பால் போய்க் கொண்டிருந்த திருவடிகளை உடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய பெருஞ் செல்வமே, வெறுப்பு முதிர்ச்சி அடைய கோபித்து, நீண்டிருந்த எட்டு மலைகளில் வசித்திருந்த அசுரர்களை முட்டித் தாக்கி போர் புரிந்த வேலினை உடையவனே, சித்தர்கள் தமது மனத்தில் ஆழ்ந்து நிலைக்கும்படி நிரம்ப உனது புகழைப் பாட, முக்தியைத் தர வல்ல பெருமாளே, தமிழ்க் கடவுளாகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1260 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், கொண்டு, பெருமாளே, சென்று, பார்த்தும், உனது, வேண்டிய, உடைய, நான்