பாடல் 1249 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
நாட்டக்குறிஞ்சி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதனன ...... தனதான |
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச் சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென திகழண்டர் முநிவர்கண ...... மயன்மாலும் அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ அடியென்க ணளிபரவ ...... மயிலேறி அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி அருமந்த பொருளையினி ...... யருள்வாயே பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி பரிதுஞ்ச வருமதுரை ...... நடராஜன் பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ பவளஞ்சொ லுமைகொழுந ...... னருள்பாலா இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு மெரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ டெணுபஞ்ச ணையின்மருவு ...... பெருமாளே. |
கடல் அலைபோல வருவதும், வஞ்சனைச் செயல்களால் வருவதுமான நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும், மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் உடலும், மும்மலங்களும் அழியவும், சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, திளைத்து விளையாடி, உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து அழுந்தப் பதிய, என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி, விளங்கும் தேவர், முனிவர் கூட்டமும், பிரமனும், திருமாலும், (நான்) சிவ பெருமானது குமரனே என்று மகிழ, யானை முகத்தை உடைய கணபதி என் தம்பியே என்று (என்னிடம்) மகிழ்ச்சி கொள்ள, அடியேனிடத்தில் கருணையை மிகக் காட்ட (நீ) மயிலின் மேல் ஏறி, வேல் ஏந்தி, உன் தந்தையின் திரு நடனம் என்று சொல்லும்படி, உடன் இருந்து என்னுடன் பொருந்தி, அரிய மறைப் பொருளை இனி எனக்கும் அருள்வாயாக. குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி, ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகள் (ஓரிரவில்) இறந்துபடும்படியாக எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான், பழிக்கு பயந்தவனாக என்னுடைய அருகில் இருப்பவன், செந்தாமரை போன்ற திரு உருவத்தினன், பவள நிறத்தினன் என்றும் சொல்லும்படியானவன், உமா தேவியின் கணவன் ஆகிய சிவ பெருமான் ஈன்ற மகனே, இருள் சூழ்ந்ததும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரெளஞ்ச மலையும், அதனிடம் இருந்த அசுரர்களும், எங்களுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும், எரிபட்டுப் பொடியாகும்படியாக வேலைச் செலுத்தியவனே, என்னுடைய அன்பில் எப்போதும் உறைபவளும், வள்ளி மலைச் சாரலில் மகிழ்ந்த வஞ்சிக் கொடி போன்ற குறப் பெண்ணுமாகிய வள்ளியுடன் மதிக்கும்படியான பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1249 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதந்த, என்னுடைய, தனதனன, இருந்த, பெருமான், ஆகிய, திரு, வடிவம், வினை, வினைகளும், பெருமாளே, சொல்லும்படி