பாடல் 1228 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்த தானன தந்த தானன தந்த தானன ...... தனதான |
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல் கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள் கண்டு பாவனை கொண்டு தோள்களி லொண்டு காதலி ...... லிருகோடு மண்டி மார்பினில் விண்ட தாமென வந்த கூர்முலை ...... மடவார்தம் வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி கின்ற மாயம ...... தொழியாதோ கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி கொண்டு கோகில ...... மொழிகூறுங் கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு குன்றில் மால்கொடு ...... செலும்வேலா வெண்டி மாமன மண்டு சூர்கடல் வெம்ப மேதினி ...... தனில்மீளா வென்று யாவையு மன்றி வேளையும் வென்று மேவிய ...... பெருமாளே. |
கற்கண்டைப் போன்ற இனிய பேச்சு, வண்டுகள் சேரும் கூந்தல், சந்திரனை ஒத்த முகம், மூங்கில் போன்ற மென்மையான தோள், உவமைகளை அவ்வாறே பாவித்து தோள்களில் சாரும்படி ஆசை ஏற்படுவதால், இரண்டு மலைகள் நெருங்கி மார்பில் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லும்படி சிறப்புற்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த மாயத்தில் மனம் போய் மாய்கின்ற மயக்க அறிவு நீங்காதோ? கரிய மேகம் போன்ற கூந்தல், கெண்டை மீன் போன்ற கண் இவைகளைக் கொண்டு, குயில் கூவுதல் போன்ற பேச்சுக்களைப் பேசும் அழகிய மார்பினளான குற மகள் வள்ளி வாழும் வள்ளி மலையில் காதலோடு சென்ற வேலனே, சிறந்த தன் மனம் களைத்துப்போய், நெருங்கி வந்த சூரன் வாடவும், கடல் கொதித்து வேகவும், உலகையே காக்க வந்து, எல்லாவற்றையும் வென்று, பின்னும் மன்மதனையும் உன் அழகால் வென்ற* பெருமாளே.
* மன்மதனுக்கு 'மாரன்' என்று பெயர்.முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயரின் காரணம் 'கு + மாரன்' = மாரனை அழகிலே வென்றவன், என்பதால்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1228 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்டு, வென்று, தானன, மனம், வள்ளி, மாரன், நெருங்கி, பெருமாளே, வந்த, கெண்டை, கண்டு, கூந்தல்