பாடல் 1200 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானன தனன தனத்தத்த தானன தனன தனத்தத்த தானன தனன தனத்தத்த ...... தனதான |
வாடையில் மதனை யழைத்துற்று வாள்வளை கலக லெனக்கற்றை வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும் மால்கொள நெகிழ வுடுத்திட்டு நூபுர மிணைய டியைப்பற்றி வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு ...... வருமாய நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையி லகப்பட்டு ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு நாணமு மரபு மொழுக்கற்று நீதியு மறிவு மறக்கெட்டு நாயடி மையும டிமைப்பட்டு ...... விடலாமோ ஆடிய மயிலி னையொப்புற்று பீலியு மிலையு முடுத்திட்டு ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும் ஆகிய விதண்மி சையுற்றிட்டு மானின மருள விழித்திட்டு ஆயுத கவணொ ருகைச்சுற்றி ...... விளையாடும் வேடுவர் சிறுமி யொருத்திக்கு யான்வழி யடிமை யெனச்செப்பி வீறுள அடியி ணையைப்பற்றி ...... பலகாலும் வேதமு மமர ருமெய்ச்சக்ர வாளமு மறிய விலைப்பட்டு மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே. |
தென்றலைத் தேராகக் கொண்டு வருகின்ற மன்மதனை வரவழைத்து, ஒளி வீசும் வளையல்கள் கல கல் என்று ஒலி செய்ய, கற்றையான நீண்ட கூந்தல் சரிந்து விழ அதை முடிந்து, ஆடையை எப்படிப்பட்டவரும் ஆசை கொள்ளும்படியான வகையில் வேண்டுமென்றே தளர்த்தி உடுத்தி, சிலம்பு இரண்டு பாதங்களிலும் பற்றிச் சூழ்ந்து ஒலி செய்ய, நெற்றியில் பொட்டு அணிந்து வருகின்ற, மாயமும் ஆடல்களும் வல்ல விலைமாதர்களின் பாசாங்குச் சூழ்ச்சி கொண்ட வஞ்சக வலையில் சிக்கிக்கொண்டு, உலகில் உள்ளோர் அனைவரும் இவன் பெரிய பித்தன் என்று கூறும்படி, என் மானமும் குடிப்பிறப்பும் ஒழுக்கமும் கெட்டு, நீதி, அறிவு இவை அடியோடு கெட்டு, நாய் அனைய அடிமையாக (அம்மாதர்களுக்கு) அடிமையாகி விடலாமோ? ஆடுகின்ற மயிலை நிகராகி, மயில் இறகையும் தழையிலைகளையும் உடம்பில் உடுத்திக் கொண்டு, யாருக்கும் இல்லாத அழகை நிரம்பப் பெற்று, இளமை உடையவளாய் (தினைப் புனத்தில் கட்டப்பட்டப்) பரண் மீது வீற்றிருந்து, மானின் கூட்டங்கள் மருண்டு அதிசயித்து விழிக்கும்படிச் செய்து, கவண் கல் என்னும் ஆயுதத்தை ஒரு கையில் சுற்றி (பறவைகளை விரட்டி) விளையாடிய வேடப் பெண்ணாகிய ஒப்பற்றவளாகிய வள்ளிக்கு நான் உனக்கு வழி அடிமை என்று கூறி, பெருமை பொருந்திய அவளுடைய இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொண்டு, பல முறையும், வேதமும் தேவர்களும் நிலை பெற்ற சக்ரவாள கிரியும் அறியும்படி, அதையே கூறி, (அவளுக்கு) விலைப்பட்ட அடிமையாகி (அங்ஙனம் அடிமைப்பட்டுள்ளதை) மேரு மலையில் நன்றாக விளங்கும்படி (சிலா சாசனமாக) எழுதி வைத்துள்ள பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1200 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்தத்த, கொண்டு, கெட்டு, அடிமையாகி, கூறி, இரண்டு, வருகின்ற, விடலாமோ, பெருமாளே, செய்ய