பாடல் 1196 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸத்வனி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தான தனதனன தான தாத்தன தான தனதனன தான தாத்தன தான தனதனன தான தாத்தன ...... தனதான |
மோது மறலியொரு கோடி வேற்படை கூடி முடுகியெம தாவி பாழ்த்திட மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும் மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள் ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர் கூடி நடவுமிடு காடெ னாக்கடி தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி ஏழு புவனமிகு வான நாட்டவர் சூழ முநிவர்கிளை தாமு மேத்திட ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே சூது பொருதரும னாடு தோற்றிரு வாறு வருஷம்வன வாச மேற்றியல் தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற் சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி ராளு முரிமைதரு மாறு கேட்டொரு தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள வாது சமர்திருத ரான ராட்டிர ராஜ குமரர்துரி யோத னாற்பிறர் மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப வாகை விஜயனடல் வாசி பூட்டிய தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே. |
தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் வேகமாக வந்து எனது உயிரை (உடலினின்றும்) பிரிக்க, (என் மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும், துக்கம் மூண்டு மிகவும் வேகமாக மேலே விழுந்து, இரக்கத்துடனே கண்களில் நீர் கொண்டு நிற்க, கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும், இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று விசாரிக்கவும், பிணத்துக்குப் பின் சிலர் கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும், (இவனை) விரைவாக ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும், இவன் புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்), ஏழு உலகங்களில் உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும், சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் போற்றி நிற்க, சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ எழுந்தருள்வயாக. சூதுப்போர் செய்த தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வசித்தபின், கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து வந்த நாளில், பசுக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து, அரசாட்சி உரிமையைத் தரும்படி கேட்பதற்காக, ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்) என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன் மீண்டும் வரவும், வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட மற்றவர்களும் இறக்க, பிற அரசர்களோடும் சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய, வரிகள் பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை வேகமாகச் செலுத்திய பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே, விண்ணுலகத்தோருக்குச் சக்ரவர்த்தியாகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1196 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சிலர், கூறவும், வலிய, தகிட, கொண்டு, தனதனன, தாத்தன, கூடி, போருக்கு, பெருமாளே, துரியோதனன், பொருந்திய, வந்த, விராட, வாது, நிற்க, பூட்டிய, ஒப்பற்ற, வேகமாக