பாடல் 1172 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான |
பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி பட்டப்புள கச்செப் பிளமுலை பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப் பத்மத்திய ரற்புக் கடுகடு கட்சத்தியர் மெத்தத் திரவிய பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ் சித்தத்தரு ணர்க்குக் கனியத ரப்புத்தமு தத்தைத் தருமவர் சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந் தெட்டிற்படு கட்டக் கனவிய பட்சத்தரு ளற்றுற் றுனதடி சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ மத்தப்பிர மத்தக் கயமுக னைக்குத்திமி தித்துக் கழுதுகள் மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட மற்றைப்பதி னெட்டுக் கணவகை சத்திக்கந டிக்கப் பலபல வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே முத்திப்பர மத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவமுனி முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால் முற்றித்திரி வெற்றிக் குருபர முற்பட்டமு ரட்டுப் புலவனை முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே. |
வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின் கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது பட்டு ஆடையை அணிந்து, முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப் போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும் (இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற கண்களை உடையவர்கள். மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய, உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள். அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி, உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால், உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல் உறுவது தொலையாதோ? செருக்கையும் மதி மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக் குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும், மற்றும் பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே, முக்தி என்னும் மேலான பொருளைப் பெற நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக் கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே, எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யா மொழி** என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப் புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.
* சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில் செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயரிடப்பட்டது.** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1172 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, என்னும், மீது, தனதன, தத்தத், தத்தத்தன, இருந்த, மான், இருக்க, வள்ளி, நிலையில், பெண், உடையவர்கள், பெற்றுத், புலவனை, பெருமாளே, இளம், கொண்டு