பாடல் 1168 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
மத்யமாவதி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தனதான |
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே தருவி னாட்டர சாள்வான் வேணுவி னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் சகல லோக்கிய மேதா னாளுறு மசுர பார்த்திப னோடே சேயவர் தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் றருள ஏற்றம ரோடே போயவ ருறையு மாக்கிரி யோடே தானையு மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி அமரில் வீட்டியும் வானோர் தானுறு சிறையை மீட்டர னார்பால் மேவிய அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே. |
அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே, வெல்க, வெல்க, தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, வெல்க, வெல்க, பரிசுத்த மூர்த்தியாம் சிவனாருக்கு ஒப்பற்ற குமாரனே, வெல்க, வெல்க, மிக வலிமையான வேலினை ஆயுதமாய்க் கொண்டோனே, வெல்க, வெல்க, என்றெல்லாம் இரவும் பகலுமாக நான் நிரம்பவுமே உன்னுடைய திருவடியைப் பணிந்து போற்றும் படியாக இனியும் சிறிதும் தாமதம் செய்யாமலேதான், இந்தப் புவியில் ஆழமுள்ள ஏழு கடல்களைப் போல் எழுகின்ற பிறவி என்னும் பெருங்கடலில் நான் அனுபவிக்கும் மனக் குழப்பங்களைத் தீர்த்து, உன் பாதமே தலையில் சூடியவனாய், உன் அடியார்கள் வாழ்கின்ற கூட்டத்திலே கூட்டி வைத்து, இனிய ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, என்னை ஆண்டுகொண்டு அருள்வதன் பொருட்டே தனியேனாக உள்ள என் முன் நீ தோன்றும் ஒருநாள் உண்டோ? கற்பகத் தருக்கள் நிறைந்த தேவநாட்டு அரசாட்சியைப் புரியும் இந்திரன்* மூங்கிலின் உருவம் எடுத்து, பல நாட்களாக தான் செய்த தவத்தின் பயனாக சிவபிரான் உன்னை அழைத்து நீ சென்று தேவர்களின் சிறையை நீக்க, எல்லாவிதமான உலகப்பற்றும் சுகபோகமும் ஆண்டு அனுபவிக்கும் அசுரர்களின் அரசன் சூரனையும், அவனது மக்கள், சுற்றத்தாரையும் வேல் கொண்டு அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று திருவாய் மலர்ந்து ஆணையிட, அதனை ஏற்று போர்க்களத்துக்குச் சென்று அசுரர் தங்கிய பெரிய கிரெளஞ்சம், ஏழு மலைகளுடன், சேனையும் அழிந்து விழச்செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் பகை பூண்டு, போரிலே அவனை அழித்தும், அடைபட்டிருந்த சிறையினின்றும் தேவர்களை விடுவித்துக் காத்தும், சிவபிரானிடம் திரும்பி வந்து சேர்ந்த மகா பராக்ரம வீரனே, தேவர்கள் தொழும் பெருமாளே.
* சூரனை அஞ்சி இந்திரன் சீகாழிப் பதியில் மூங்கில் உருவில் தவம் செய்துவந்த குறிப்பு கந்த புராணத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1168 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வெல்க, ஜேஜெய, தானா, தாத்தன, தானன, தேவர்கள், நான், சென்று, பெருமாளே, அனுபவிக்கும், தானுறு, மாறே, பிறவி, தகதிமி, வானவர், சிறையை