பாடல் 1164 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான |
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற் சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற் சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால் தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத் தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர் சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச் சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய் தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந் தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத் தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச் சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச் சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச் செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச் செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே. |
மார்பகங்கள் கொஞ்சம் குலுங்க, பொன் ஆபரணங்களும் பட்டாடையும் இலங்க, அழகிய சலங்கையும், ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற சிலம்பும், கையில் வீணையும் சிறப்பாக விளங்க, கைக்குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப் பேசி, அன்புக்கு இதமான பொன்னாலாகிய மாலைகளைக் கழுத்தினில் சுற்றிக்கொண்டு, ஒருசேர இரு கண்களாகிய அம்பாலும் வேலாலும் நாள் தோறும் (காம மயக்கமாகிய) பித்தத்தைத் தந்து, மனம் ஒத்து, சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் கைகட்டி நடப்பவர்களாகவும் நடந்து கலவியில் கூடி, தினமும் வஞ்சிப்பவர்களாக தங்களுக்கு உரிய பணத்தை (வந்தவரிடம் இருந்து) அபகரிக்கும் விலைமாதர்களின் தந்திர உபாயங்களில் அகப்பட்டுத் திரிந்தவனாக பயனற்ற வழியில் புகுகின்ற எனது இழி குணத்தை ஒழித்து, மங்களகரமான உயர் நிலையைப் பெற்று தவ நிலையை நான் அடைய உனது திருவடிகளைத் தந்து அருள்க. தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இவ்வாறான ஒலிகளுடன் சப்திக்கும் முரசுகளின் தாளங்களுக்கும், தகுந்தொத்தித் திமிந்தித்தித் என்று ஒலிக்கும் பேருடுக்கைகளுக்கும் பயந்து சோர்ந்து அசுரர்கள் சிதற, தக்கவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, போருக்கு வந்த அசுரர்களை கோபம் மேலெழுந்து பொங்கி எரிக்க, கையில் இருந்த அம்புகளைத் தொடுத்ததால் நூற்றுக் கணக்கான மலைகளின் உச்சிகள் யாவும் நடுக்கம் கொள்ள, கிரெளஞ்ச மலை அஞ்ச அதைப் பிளந்து பொடியாக்கி, உலகத்தின் எல்லாத் திக்கில் உள்ளவர்களும் நன்மை பெற்று விளங்கச் செய்து, போர்க் களத்துக்குச் சென்று வெற்றியைக் கைப்பற்றிக் கொண்ட அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1164 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தத்தத், அழகிய, கையில், தந்து, பெற்று, பெருமாளே, தகுந்தொத்தித், தடுண்டுட்டுட், டிடிண்டிட்டிட், டடண்டட்டட், டிமிண்டுட்டுட், திமிந்தித்தித்