பாடல் 1137 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...... ; தாளம் -
தனதன தனதத்த தனனா தனனா தனதன தனதத்த தனனா தனனா தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான |
உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே உளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி உருகுத லொருசற்று மறியேன் வறியேன் இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன் உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர் அமையென வளர்சித்ர இருதோள் தழுவா அமுதென மதுரித்த கனிவா யணுகா அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... ததிமூழ்கி அநவர தமுமுற்ற மணிமா முலைதோய் கலவியி னலமற்ப சுகமா கினுமா அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே தமனிய குலசக்ர கிரியோ கடலோ விடமென முடிவைத்த முதுபே ரிருளோ தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல் ...... கொடுபார்வை தழலெழ வருமுக்ர எமபா தகனோ யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும் எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே. |
மயில் போன்ற உமா தேவி பெற்ற, மயிலை வாகனமாக உடையவனே, கார்த்திகைப் பெண்டிர் அறுவருக்கும் ஒப்பற்ற பாலகனே, உள்ளம் உருகுகின்ற பக்தர்களின் நட்பாளனே, நான் உன்னை மறக்க மாட்டேன் என்று உன்னைப் போற்றி செய்து மனம் உருகுதல் ஒரு சிறிதும் அறியாதவன் நான். தரித்திரம் பிடித்தவன். நல் வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் கொடியவன் அடியேனாகிய நான் அறிவு இல்லாதவன். (அத்தகையவனாகிய நான்) பெற்று உய்ய முக்தியைத் தருவாயாக. பவளம் போன்ற வாயை உடைய இளம் பெண்களின் மூங்கில் போன்று செழித்து வளர்ந்துள்ள அழகிய இரண்டு புயங்களையும் தழுவி, அமுதம் போல் இனிப்பைக் கொண்ட (கொவ்வைக்) கனி போன்ற வாயை நெருங்கி அனுபவித்து, படுக்கையில் சேர்ந்து களிக்கும் காம இச்சை என்னும் பெரிய கடலில் முழுகி, எப்போதும் பொருந்தியுள்ள அழகிய மார்பகங்களில் படியும் புணர்ச்சியின் இன்பம் கொஞ்ச நேரமே நீடிக்கின்றது என்றாலும், அது பெரிதும் இயற்கையாகவே விரும்பப்படும் ஒரு நுகர்ச்சி இன்பமாகும். இதைக் கொஞ்சமும் விட்டொழிக்க முடியவே முடியாது. பொன் மலையாகிய சிறந்த மேரு மலையோ? சக்ரவாள கிரியோ? கடல் தானோ? விஷத்தை உச்சியில் கொண்டதும் முற்றினதுமான பெரிய இருட்டாகுமோ? வில்லைப் போல போர்க்கென்று அமைந்துள்ள, கொலை செய்ய வல்லதுமான மூன்று நுனிகளை உடைய வேல் போன்ற கண்களின் கொடிய பார்வை நெருப்பைக் கக்க வருகின்ற கொடுமை காட்டுகின்ற யமன் என்ற பாதகன் தானோ? யுக முடிவில் மிகுந்து எழுகின்ற வடவா முகாக்கினியோ? ஒப்பற்ற இவன் என்று யாவரும் பயப்படும்படி, மாமிசத்தை உண்ணும் அரக்கர்களின் அரசனாகிய சூரன் தேவர்கள் யாவரும் போருக்கு வாருங்கள், வாருங்கள், திருமால், பிரமன் முதலியோர் யாவரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், மூவேழு உலகத்தினரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், என்னுடன் சண்டை செய்ய வாருங்கள், என்று கூச்சலிட்டு வருகின்றான் அந்த ஒப்பற்ற துஷ்டனாகிய சூரன். எங்களைக் காத்தருள வேண்டும், காத்தருள வேண்டும் என்று வடக்கில் உள்ள அஷ்ட குல பர்வத வாசிகளும் அடைக்கலம், அடைக்கலம், புரந்தருளுக, காத்தருள்க என்று முறை இட, ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய அரசனே, தேவர்கள் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1137 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாருங்கள், தனனா, அறையோ, போருக்கு, நான், ஒப்பற்ற, தனதன, யாவரும், தனதத்த, செய்ய, சூரன், அடைக்கலம், தானோ, வேண்டும், காத்தருள, தேவர்கள், வாயை, அபிதா, முறையோ, வடவா, கிரியோ, பெருமாளே, என்னும், அழகிய, உடைய, இரண்டு, பெரிய