பாடல் 1071 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்த தந்தனம் ...... தனதான |
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன் ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும் பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன் றமைத்த பெண்தனந் ...... தனையாரத் திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின் திறத்தை யன்புடன் ...... தெளியாதே சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென் திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன் தரித்த குன்றநின் ...... றடியோடுந் தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந் தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ் சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன் துணைச்செய் கின்றநின் ...... பதமேவும் சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே. |
நிரம்ப மனம் மகிழ்ச்சி உற்று உருகும் அன்பு இல்லாதவன் நான். பெருந்தன்மைக் குணங்கள், நற்குணங்கள், மதிக்கத் தக்க கூச்சம் முதலியவற்றுள், நான் உய்யும் வகைக்கு, ஒன்றும் இல்லாதவன். வேல் ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் தோன்றி வளர்ந்த வள்ளியின் மார்பினை மனம் நிறையத் திருக் கைகளைக் கொண்டு தழுவச் சென்ற உன்னுடைய மேன்மைக் குணத்தை அன்புடன் நான் தெளிந்து உணராமல், கோபக் குணமே நிரம்பி, எனது கோணலான புத்தி மாறி என்றைக்கு நற்புத்தியை நான் அடைவேனோ? செருக்குடன் அன்று போய், அருள் கண்ணோக்கம் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்த கயிலாய மலையை அடிவாரத்தில் நின்று அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய ராவணனுடைய தலைகளைத் துண்டித்த வீரனாகிய திருமாலும், எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும், சுருக்கம் இல்லாமல் விரிந்த கிரணங்களை வீசும் சூரியனும், இந்திரனும், துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை விரும்பி நிற்பவர்களான உன் அன்பில் முழுகியுள்ள அடியார்களும், மூன்று உலகத்தோரும், போற்றித் துதிக்கும் தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1071 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நான், தனத்த, தந்தனம், இல்லாதவன், பெருமாளே, கின்றநின், மனம்