பாடல் 1064 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
குருதி யொழுகி யழுகு மவல குடிலை யினிது ...... புகலாலே குலவு மினிய கலவி மகளிர் கொடிய கடிய ...... விழியாலே கருது மெனது விரக முழுது கலக மறலி ...... அழியாமுன் கனக மயிலி னழகு பொழிய கருணை மருவி ...... வரவேணும் பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் ...... பணிவேலா பணில வுததி யதனி லசுரர் பதியை முடுக ...... வரும்வீரா இரதி பதியை யெரிசெய் தருளு மிறைவர் குமர ...... முருகோனே இலகு கமல முகமு மழகு மெழுத வரிய ...... பெருமாளே. |
ரத்தம் ஒழுகி அழுகிப் போகும் துன்பத்துக்கு இடமான குடிசையாகிய இந்த உடலை இனிமையாகப் பேசும் சொற்களைக் கொண்டு நெருங்கி உறவாடி, இனிய புணர்ச்சி இன்பம் தரும் பொது மகளிருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே எண்ணுகின்ற என்னுடைய காம இச்சை முற்றிலுமாக என்னுடன் போருக்கு எழும் யமன் அழிப்பதற்கு முன்பாக, பொன்னிறமான மயிலின் அழகு பொலிந்து ஒழுக (நீ) அருள் வைத்து வந்தருள வேண்டும். சூரியன் சுழற்சி அடையும்படி, கிரெளஞ்ச மலை பிளவுபடச் செலுத்திய தொழில் அமைந்த வேலினை உடையவனே, சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரனை ஓட்டி விரட்ட வந்த வீரனே, ரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய குமரனே, முருகனே, விளங்கும் தாமரை போன்ற முகமும், அதன் அழகும் எழுதுதற்கு முடியாதவையான பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1064 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, பதியை