பாடல் 1053 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பிருந்தாவன சாரங்கா
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. |
(பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும் ஆதிஸேஷன் நடனம் ஆடவும், பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு) ஒற்றுமையாக காளி தான் ஆடவும், அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி போட்டியிட்டவரும் ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும், அருகில் பூதங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க ஸரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்* கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில் பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்) பெரிய சேனை பொடிபட (உதவியவரும்), கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும்சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதிலே (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும், (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும், ஆன மாமாயன் திருமாலின் மருமகனே அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே.
* இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாட்டு இது. இந்த வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக் கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1053 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஆடவும், னாராட, ப்ரபுட, தானான, நின், அருகில், மயிலும், ஊதியவரும், சபையில், கொண்டவரும், நடனம், வீசி, தானாட, மலரில், மாமாயன், பெருமாளே, தகிட, காளி