பாடல் 101 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - மாண்ட்;
தாளம் - ஆதி
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான |
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. |
வீரனாம் மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று வந்து தீப்போல வீசிப் பொருந்த, வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்ந்த மாலைப் பொழுதினிலே நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்களின் துயரைக் களைபவனே, அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.
* மன்மதனின் ஐந்து மலர்க்கணைகள்: தாமரை, முல்லை, மாம்பூ, அசோகம், நீலோற்பலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 101 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, வந்து, தந்த, செம்பொன், பெருமாளே, வழிபாடு, ஐந்து, தந்து, சிந்த, துன்ப, கந்த