கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. |
4 |
சுற்றத்தினர் சூழ போருக்கு எழுந்த, சூரபத்மனின் மார்பையும், கிரவுஞ்ச மலையையும், தொளைத்து ஊடுறுவிப் போகும்படி, தொடுத்த வேலாயுதத்தை உடையவனே, வளையளை அனிந்த கைகளை உடைய மனைவியுடன், மக்களும் (பிற செல்வம், உறவினர்) என்று கூறப்படுகின்ற அடியேன் கட்டுண்டு அழிவது, முறையோ முறையோ (முறை ஆகாது) ..
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. |
5 |
வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம், நீக்க வல்லவராகிய, உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான், தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை), தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை சதா நினைத்து, சோர்வு அடையச் செய்கிற, உலக மாயைக்குள் கிடந்து, கலங்குவதை நான் விடவில்லையே. ..
திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோத தயா பரனே. |
6 |
எனக்கு இடும் கட்டளை எவை என வினவி, வள்ளி பிராட்டியின் திருவடிகளை வணங்குகின்ற, குன்றாத, மிகுந்த காதல் கொண்டுள்ள, கருணைக் கடவுளே, மிகவும் கடினமான மனமாகிய கல்லின் மீது, உனது திருவடியான, அழகு மிகுந்த தாமரை மலருவது என்ன ஆச்சரியம்? ..
கெடுவாய் மனனை கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. |
7 |
ஏ மனமே, நீ கெட்டு வீணே ஒழிகின்றாய், நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக, இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம் செய்வாயாக, வேலாயுதக்கடவுளின் திருவடிகளைத் தியானிப்பாயாக, நீண்ட பிறவித் துன்பத்தை, பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக வினைகள் யாவையும் விட்டு விடுவாய் ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விடுவாய், மிகுந்த, வள்ளி, பிரான், செல்வம், முறையோ, தகுமோ