கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச் சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற் சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச் சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. |
97 |
அற்பமான, சிறு உமியைக் கூட, தர்மம் செய்வதற்கு மனமில்லாமல், மரத்தைப்போல ஈவு இரக்கம் இல்லாமல் இருப்பவர்களே, அழிந்து போவதும் ஜீவனுக்கு ஒதுங்கிடமான (இந்த தேகத்தில்), தும்மல் எற்படும் போதிலாவது, முருகா உன் அடைக்கலம் என்று சொல்லுங்கள், அதன் மூலமாக நற்கதி அடைவீர்கள், சிவந்த தினைப்புனத்தில் வாழும், வள்ளி நாயகிக்கு, தன்னுடைய வம்ச பரம்பரையை எடுத்து உரைத்து அவளுடைய அன்பை வேண்டி, நின்றவனும், வில்லைத் தரித்த கண்ணப்ப நாயனார், தான் முதலில் ருசி பார்த்து நைவேத்தியமாகக் கொடுத்த மாமிசத்தை, மிகவும் களிப்புடன் உண்டவரும், மேன்மையான விதத்தில், சர்ப்பத்தைத் தரித்த சடையை உடைய சிவபெருமானின், மைந்தனாகிய கந்தக் கடவுளின், சிறிய திருவடிகளை தியானித்துக் கொண்டே (தும்மும் போது 'குமரா சரணம்' என்று சொல்லுங்கள்). ..
சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற் சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற் சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. |
98 |
கலப்பையையும், முதலையின், தலையை, அற்று விழும்படி, எதிர்த்து தகர்த்த, சக்ராயுதத்தை, அழகிய கையில் தரித்திருக்கும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலும், சிவாகமங்களை அருளிச் செய்த சிவபெருமானும், மன மகிழ்ச்சி கொள்ளும் ஆச்சார்ய மூர்த்தியே, செழுமை மிக்க தினை புனத்தில் வாழும், வாசனைத் திரவியம் பூசிய, மலை போன்ற மார்பகங்களை அணைத்த, கந்தக் கடவுளே, சிறந்த தமிழ் பனுவல்களில் சொல்லப்படும், சீர் முதலிய எட்டு வகைகளிலும் வல்லவனாகிய கவி சிரேஷ்டனனே, இசைப் பிரியனே, என்று துதிப்போருக்கு, தீவினைகள் கிட்ட அணுகாது. ..
தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந் தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல் தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத் தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே. |
99 |
அக்னியானது, தனது இயல்பாகிய எரிக்கும் தன்மையை விட்டது போல், கோபத்தை அடியோடு ஒழித்த, உள்ளத்துள், சத்யம் என்கிற ஞான விளக்கை, அணைந்து விடாமல் எப்போழுதும் பிரகாசிக்கும்படி, நம்முடைய, தீ வினையாகிய, இருள், நீங்கும்படி, ஏற்றி வைத்தோம், வளமையான தினைப் புனத்தில், தீர்ந்து போகாமல் எப்போழும் பசுமையாகவே இருக்கும், தினைப்புனத்தில் வாழும், மான் போன்ற வள்ளி நாயகியின், மணாளனும், உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கின அடியார்களுக்கு, செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோட்ச வீட்டை, வரமாகக் கொடுக்கும், முக்திச் செல்வனான முருகப்பெருமானுக்கு (மெய்த் தீபம் எடுத்தனம்). ..
செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர் செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச் செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. |
100 |
ஏ மனமே, சென்று, கந்தக் கடவுள் இப்பூவுலகத்தில் சம்பந்தராக அவதரித்த சீர்காழிப் பதியை, துதிப்பாயாக (அதன்), அந்தக் குமரக் கடவுளின் தெய்வீக நாயகியாகிய தேவசேனை, ஊர்ந்து செல்லும், மேகங்கள், நல்ல மழையைப் பொழிந்து, மிகவும் இகழ்ச்சிக்கிடமான, நம்முடைய வறுமை என்கிற நிலையை, போக்கி விடும், கொடிய எமன், நம் மேல் செலுத்தும் நரக தண்டனையை, அவனுடைய கை வேலாயுதமானது, போக்கி விடும், பக்திப் பயிரைக் காத்து வளர்த்த வள்ளி நாயகியின், பெரும் பேறாக விளங்கும், மணாளனாகிய முருகப் பெருமான், குக சாயுச்சியமாகிய தனது சரணங்களைக் கொடுத்து அருளுவான். ..
கந்தர் அந்தாதி முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சிறுமிக், தீவினை, யற்ற, சீரங்க, செல்வந், குமர, கந்தக், வள்ளி, திகழு, வாழும், விடும், என்கிற, நம்முடைய, அடியோடு, நாயகியின், போக்கி, புனத்தில், தினைப்புனத்தில், சொல்லுங்கள், செந்தினைமேற், தரித்த, மிகவும், தனது, கடவுளின், போல்