கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச் செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற் செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே. |
93 |
மேகத்தை, அசைக்கின்ற, அழகிய சோலைகள், சூழ்ந்த, செந்திற்பதியான், அறிகின்றானில்லை, உலகம் எங்கும், பிச்சை வாங்குவதற்காக, போக வேண்டாம், என்று சொல்லி, சிவபெருமானின் கையிலுள்ள பிரம்ம கபாலத்தில், தனது ரத்தத்தை ஒழுக விட்டவரும், துன்பத்தையும், பயத்தையும், பெருமை வாய்ந்த லங்காபுரிக்கு, உண்டாக்கியவருமாகிய, மகாவிஷ்ணுவின், கரிய நிறத்தை, போல விளங்குகின்ற, இருள் நேரத்தில், மன்மதனின் ஐந்து பாணங்களும், மிக நுட்பமான இந்தப் பெண்ணின், பிராணனாது, அழிந்து போகும்படி, வருத்தி நீக்குகிறதை, (செந்திலான் அறிகின்றானில்லை). ..
சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற் சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால் சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற் சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே. |
94 |
சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனை, சாம்பலாகச் செய்த, நெருப்பு விழியை உடைய சிவபெருமானின், குமாரனே, எட்டு திக்குகளும் முன்போல ஸ்திரமான நிலையை அடையவும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின், குமாரனாகிய பிரம்மா, திகைப்பை அடையவும், சூரபத்மாவின் உடலை, அழித்து, பின்பு சமுத்திரத்தில் குளித்து வந்த, வேலாயுதத்தைக் கையில் ஏந்திக் கோண்டு, எம தூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால், பெரிய சப்தத்தைப் போட்டு கடகொண்டு, எருமை வாகனத்தில் வரும், எமனுடைய வலிமைத் திறனை, நீ கண்டித்து அடக்க வேண்டும். ..
திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந் திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந் திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத் திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே. |
95 |
பாபமற்ற கைலாயத்தின், கதவைப் திறப்பதற்கு, திறவு கோலானவனே, கிரவுஞ்ச கிரியின் மார்பு, பிளக்கும்படி செய்து, ஆச்சரியமான விதத்தில், தாமரையில் வாழும் பிரம்மனை, ஜெயித்தவனே, தெற்கு திசையிலிருக்கும், செந்தில் பதியை விட்டு, நீங்காத, அழகிய மயில் வாகனத்தை உடையவனே, எனது உடல் அழியும் அந்தக் கடைசி காலத்தில், என்னுடைய மனதை, ஒருவழி படுத்த, அடைக்கல ஸ்தானம் எது எனில் உன்னுடைய மங்களகரமான, தண்டை அணிந்த திருத் தாள்களே. ..
திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால் திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத் திருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத் திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே. |
96 |
திருக்கை என்னும் மீன்கள் வாழும், கடல்களோ? தாமரைகளோ? விடமோ? மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள கூரிய பாணமோ? சிவந்த வேலாயுதமோ? கண், கூன் பாண்டியனின் முதுகில் இருந்த கூனாகிய விகாரத்தை, தாமரை போன்ற, தன் திருக்கையில் தரித்த விபூதியினால், நேர்படச் செய்தவரும், தமிழ் நூலாகிய, சிவ பக்தியை உண்டாக்கும், ருக்கு வேத சாரமாகிய தேவாரப் பாக்களை, பர தெய்வம் யார் என்கிற சந்தேகத்தைத் தீர்த்து, சம்பந்தப் பிள்ளையாராக மொழிந்தருளிய குமாரக்கடவுளின், மலையின்கண் வாழும், இந்த இளம் பெண்ணின் கண்). ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செல்லலை, திறவா, திருக்கையம், சேதிக், கனைத்து, யம்பொழி, வாழும், கையில், அழகிய, அடையவும், உடைய, சிவபெருமானின், அறிகின்றானில்லை, சிவந்த, பெண்ணின்