கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண் சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற் சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன் சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே. |
85 |
கந்தக் கடவுளே, கடப்ப மாலையை அணிந்து, அசுரர்களின் கூட்டத்தை, தெளிந்த அலைகளை உடைய சமுத்திரத்தில், கண்கள் கோபத்தால் சிவந்து, அந்த, மா மரமாய் நின்ற சூரனுடன், போரிட்டு கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே, அழகிய ஜடையின் மேல், இளம் பிறை, கங்கா ஜலம், சர்ப்பங்கள், இவைகள் எல்லாம் (நடனமாடும்போது) துள்ளிக் குதிக்கும்படி, சூடி இருக்கும் பரமசிவனின் குமாரனே, சுற்றமாக பற்றிக் கொள்ளும், மனை வாழ்க்கை, பெண்டிர், என்று சொல்லப்படுகின்ற, இந்தப் பிரபஞ்ச சேற்றில், மெலிந்து வருந்துகிறேன், என்னைக் காத்தருள்வாயாக. ..
சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற் சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற் சேறலைத் தாறலைக் தீர்க்குங் குமார திரியவினைச் சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே. |
86 |
சேற்றை, உழக்கி, ஆற்றின் அலையில், மேலே எழுந்து, வளப்பமான, பாக்கு மரத்தில், சேல் மீன்கள், மரத்தின் உச்சியில் இருக்கும், குலைகளை, மோதித் தாக்கும், செந்திற் பதியோனே, என் சித்தமானது, கெட்ட மார்க்கத்தில், போய்ச் சேருவதையும், அளவில்லாத அஞ்ஞான இருளை அடைவதையும், நீக்குகின்ற குமாரக்கடவுளே, மாறுபடும்படி, இருவினைகளால் ஏற்படும் பிரபஞ்சச் சேற்றில், என்னை உழல வைத்து, வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ? உன்னுடைய அருட் பிரகாசத்தின் உண்மைத் திறனை உணர்ந்து அதுவே பற்றுக் கோடாகக் கருதி இருக்கும் என்னை (ஆறலைக்கத் தகுமோ?). ..
திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந் திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல் திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந் திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே. |
87 |
உன்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார், குளிர்ந்த தினைப் புனத்தில் வாழுகின்ற தேவதையே என்று புகழ்கின்றார் (இவர் யார் எனில்), என்றும் கெடுதலையையே செய்து வந்த, மா மரமாய் நின்ற சூரபத்மாவை, தன்னுடைய சுற்றத்தாருடன், உவர்ப்பை உடைய, பெரிய சமுத்திரத்தில், அழிந்து போனான், என்று தேவர்கள் எல்லாம் பேசும்படியாக, அவனை அழித்த கந்தக் கடவுள் ஆவார், செழுமையான தினைப் புனத்திலிருந்து, நீங்கிச் செல்லாத, (ஏ வள்ளி நாயகியே), பவளம் போன்ற, உன்னுடைய அதரத்தைப் பார்த்து, ஏதாவது மறு மொழி வராதா என்று, சித்தம் குலைந்து நிற்கின்றார் (இப்பேற்பட்டவர்), திருச்செந்தூராகிய தம் பதியிலும் இதே அன்பைக் காட்டினால், நம்முடைய உபசாரத்தைக் கொள்ள, இவர் தகுதி உள்ளவரே. ..
செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச் செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான் செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ் செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே. |
88 |
சேற்றில் உண்டாவதும், அழகுள்ளதும், ஒப்பற்றதும், ஒளி வீசுவதும், சிரேஷ்டதுமான, பிரம்மாவின் இருப்பிடமான தாமரையைப் போலவும், சிவபெருமான் அமுதைப்போல உண்ட ஆலகால விஷத்தைப் போலவும், வெற்றி நிரம்பிய, லங்காபுரியின், பிரகாசம் பொருந்திய அழகை, கோபித்து அழித்த, மேக வர்ணனாகிய ஸ்ரீராமனின், பாணத்தைப் போலவும், இந்திரனின், போர் புரியும், கையில் தரித்திருக்கும் உடை வாளைப் போலவும், கூர்மையான வேலாயுதத்தைப் போலவும், ஒத்திருக்கின்றன, இந்த முருகக் கடவுள் வீற்றிருக்கும், நிலத்தை (உழுகின்ற), கலப்பையை, மோதிக் கோபிக்கின்ற, வாளை மீன்கள், ஊறுகின்ற, செந்தில் பதியில், வசிக்கின்ற (இப்பெண்ணின்), சேல் கெண்டை மீன் போன்ற இரு கண்களுமே. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போலவும், வாளை, சேந்த, திறம்பா, செயலங்கை, சேறலைத், தாறலைக், சேற்றில், இருக்கும், உன்னுடைய, இவர், தினைப், அழித்த, உடைய, மராத்துட, கந்தக், சமுத்திரத்தில், கடவுள், தகுமோ, நின்ற, எல்லாம், மரமாய், சேல், என்னை, மீன்கள், அழகிய