கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. |
19 |
பொன்னிறமான கிரௌஞ்ச மலையை ஊடுருவித் தொளை செய்த கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே, கடம்ப மரத்தில் மலர்கின்ற நறுமண மலர் மாலையைச் சூடிக்கொண்டுள்ள திருமார்பினை உடையவரே, [ஞானத்திற்கெல்லாம் எல்லையாக விளங்கும்] மௌன நிலையை அடைந்து தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து ஜீவனாகிய அடியேனையும் மறந்து [உம்மை நினைந்து] நிலைத்து இருந்தேன்; இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய் விட்டது.
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. |
20 |
சேவலைக் கொடியாக உடைய திருமுருகப்பெருமானது திருவடிகளை வணங்காமல் இவ்வுலகில் வாழ்வதற்கு நினைக்கின்ற அறிவில்லாதவர்களே! உங்களுடைய வலிய தீவினையால் உண்டாகும் நோயாகிய ஊழினது பெரிய வலிமையானது செல்வத்தை அனுபவிக்க விடுவதில்லை. உங்களுடைய செல்வம் முழுவதையும் மண்ணில் ஆழமான குழியில் புதைத்து வைத்தீர்களாயினும் [உங்கள் உயிர் உடலை விட்டு நீங்கும் போது] அந்தச் செல்வம் உங்கள் காலடியைப் பின் தொடர்ந்து வருமோ?
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. |
21 |
இறப்பு என்னும் அபாயம் தேவரீரின் அடியார்களாகிய எங்களுக்கு இல்லை. காரணம் எந்நாளும் வாய்த்த துணையாக ஒளி படைத்த மயிலும் வேலும் எங்களுக்கு உள்ளன. கிண் கிணிகள் ஒலிக்கும் படியான திருவடிகளையுடைய வீரரே! இந்திரனின் துணைவியான சசி தேவியின் மங்கல நாணினைக் காப்பாற்றியருளியவரே! கருணைக்கு உறைவிடமானவரே! அறிவுவடிவினரே! தேவ சூரியனே!.
மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. |
22 |
வண்டுகள் மொய்க்கும் பூ மாலைகளைச் சூடியுள்ள கூந்தலையுடைய வள்ளியம்மையை மணம் செய்து கொண்டவரும். இயல், இசை, நாடகம் எனப்படும் மூன்று வகையான செந்தமிழால் வசை சொல்லியவரையும் அவ்விடத்திலேயே இன்பவாழ்வில் இனிது திளைக்குமாறு அருள் புரிபவரும், கொடிய மதயானை போன்றவனும் இருபது கரங்களையும் உடைய இராவணனது பத்துத் தலைகளும் வெட்டுண்டு வீழ கணையைவிட்டு அருளிய இராம பிரானாக அவதரித்த திருமாலின் திருமருகரும், உமா தேவியார் பெற்றருளிய சரவணபவருமாகிய திருமுருகப்பெருமானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உங்களுடைய, செல்வம், உங்கள், எங்களுக்கு, உடைய, கொடிய, நிலையை, அடைந்து, அறிந்து, கிரௌஞ்ச