கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத் தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியிடவெண் டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே |
11 |
கடிவாளமானது தளராது பிடித்தவாறு வெற்றியை உடைய வேலினை ஏந்திய திருமுருகப்பெருமான், அசுரர்களின் குடல்கள் கலங்கு மாறு, சவுக்கினால் அடித்து விரட்டபட்ட குதிரையின் வேகத்திலும் மிக்க வேகத்தைக் கொண்ட மயில் வாகனத்தின் தோகையின் தொகுதி அசைதலினால் உண்டாகின்ற காற்று பட்டு மகாமேரு மலை அசைவுபட்டது. அந்த மயில் அடி எடுத்துவைக்க எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் துகள் பட்டு அழிந்தன. அந்தத் துகளினால் கடலானது மேடாகி விட்டது.
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந் துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம் இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. |
12 |
வேலாயுதத்தைத் தாங்கியுள்ள திருமுருகப்பெருமான்பால் வந்து அருள்வயப்பட்டு வலிமை அடங்கிய சேவலானது வெற்றியைத் தெரிவிக்கும் கொடியில் ஒரு சின்னமாக இடம் பெற்றது. அந்தச் சேவலானது தன் சிறகை அடித்துக் கொண்ட போது கடலானது கிழிபட்டு உடைந்துபோயிற்று; அண்டத்தின் முகடுகள் இடிந்து உதிர்ந்தன; நட்சத்திரக் கூட்டங்கள் தடுமாற்றம் அடைந்தன. ஏனைய மலைகளும் மகாமேரு மலையும் தூள்பட்டு இடிந்துவிட்டன.
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே. |
13 |
தனிப் பெருந்தலைவராகிய சிவபெருமானைத் தமது வலப் பக்கத்தில் உடையவராகிய உமா தேவியாரது திருப்புதல்வராகிய திருமுருகப்பெருமானின் உடைக்குமேல் கட்டும் மணிகள் பொருந்திய அழகிய இடையில் விளங்குகின்ற கிண் கிணியின் ஒலிபட்ட மாத்திரத்தில் அசுரர்கள் துணுக்குற்று அஞ்சி நடுங்கவும், எட்டுத்திசையில் உள்ளவர்களும் செவிடாகவும், குலமலைகள் எட்டும் பெரிய பொன் மலையாகிய மேருமலையும் அடிபெயர்ந்து அதிர்ந்து போயின. தேவர்களுக்கு அசுரர்களால் ஏற்பட்ட பயமும் அழிந்து விட்டது.
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும் அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச் சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே. |
14 |
மண்ணுலக மாய வாழ்க்கை இதுவே நிலைபெறுடையது என்று களித்துக் கூத்தாடும் ஐம்புலன்களினால் சுழற்சியுற்ற இத்தகைய பாசத்தோடு கூடிய மனத்தையுடைய அடியேனை திருவருள் நெறி காட்டி உய்யும் படிச் செய்வீராக; எட்டு குலமலைகளும் சரிபாதிகளாய்ப் பிளந்து விழவும் மேருமலையும் நிலை குலைந்து குலுங்கவும் தேவர்கள் சிறை நீங்கி பிழைக்கவும் சப்பாணிகொட்டிய பன்னிரண்டு திருக்கரங்களையுடைய ஆறுமுகப்பெருமானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விட்டது, சேவலானது, மேருமலையும், கடலானது, மகாமேரு, மயில், பட்டு, கொண்ட