கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. |
75 |
'ஓ' நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை. பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை "முருகா" என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும் பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?
கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த தாடாள னெதென் தணிகைக் குமரநின் றண்டைந்தாள் சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும் பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. |
76 |
கோணலின்றி ஆக்கல் தொழில் புரியும் பிரம்ம தேவனுக்கு அடியேன் செய்த குற்றம் யாது? கிரௌஞ்ச மலை பிளவுபடுமாறு வேலாயுதத்தை ஏவிய மிகுதியான முயற்சி உள்ளவரே, தெற்குத் திசையில் உள்ள திருத்தணிகை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள குமரக் கடவுளே! தேவரீருடைய தண்டையணிந்த அழகிய திருவடிகளை அணிகலனாகச் சூடிக் கொள்ளாத தலையும், தேவரீரின் திருவடிகளைக் கண்டு மகிழாத கண்களும், தேவரீரின் திருவடிகளைக் கை கூப்பி வணங்காத கைகளும் தேவரீரின் திருவடிகளின் புகழைத் துதித்துப் பாடாத நாவும் அடியேனுக்கென்றே பிரம்ம தேவன் தெரிந்து படைத்தனனே!
சேல்வாங்கு கண்ணியர் வண்ண் பயோதரஞ் சேரஎண்ணி மால்வாங்கி யேங்கி மயங்காமல் வௌfளி மலையெனவே கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு நூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே. |
77 |
'ஓ' நெஞ்சமே, "சேல்" என்னும் மீனின் உருவை வெல்லுகின்ற கண்களையுடைய பெண்களின் அழகிய தனங்களைத் தழுவுவதற்கு உள்ளத்தில் கருதி ஆசை கொண்டு ஏக்க முற்று மயக்கத்தை அடையாமல், வெள்ளி மலைபோல் காலை நீட்டி நிற்கும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை உடைய இந்திரனது மனைவியாகிய இந்திராணியின் கழுத்தில் அணிந்துள்ள மங்கலநாணை இந்திரனின் பகைவர்களாகிய அசுரர்கள் அந்நாளில் அறுத்து விடாது அவர்கள் மீது வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின் மலர் போன்ற திருவடிகளைக் கண்டு மகிழ்வாயாக!
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள் போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந் தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவரையே கெடுவீர்நும் மறிவின்மையே. |
78 |
கூர்மையான வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானைப் போற்றாமல் உங்கள் மனை மாட்சி, நிதி, அணிகலன் ஆகியவற்றின் மிகுதியைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொண்டாடும் மனிதர்களே! போர்த் தொழிலையே மேற்கொண்டுள்ள இயமனுடைய மந்திரியாகிய காலன் என்பவன் உங்களைக் கொண்டுபோகின்ற அந்த நாளில் நீங்கள் அணிந்து கொள்கின்ற ஆபரணங்களையும், பூமாலையை அணிந்துள்ள பெண்களையும், மாளிகை போன்ற வீட்டையும் பணப் பையையும் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்? ஐயோ, உங்களின் மூடத்தனத்தாலேயே நீங்கள் வீணே கெட்டுப் போகின்றீர்களே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தேவரீரின், திருவடிகளைக், என்னும், வேலாயுதத்தை, அழகிய, உடைய, நீங்கள், மாளிகை, அணிந்துள்ள, கண்டு, பிரம்ம, சூடிக், திருநாமங்களை, திருமுருகப்பெருமானின், எழுந்தருளியுள்ள, பொருட்டு, விம்மி, படைத்தனனே, தெரிந்து, பாடாத, நெஞ்சமே