வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 72
“ஆம், தாத்தா! பூமியை மாதா என்றும், தேவியென்றும் கூறுகிறோம்; பூஜையும் செய்கிறோம்.”
“குழந்தாய்! பூமாதேவியின் நெஞ்சைப் பிளந்தவர்களும் இந்தப் பாவிகள்தான். பிளந்து அதில் பெயரை மறந்து விட்டேன். ஞாபகம் ரொம்பக் குறைந்து போகிறது.”
“விவசாயம்.”
“ஆம், ஆம். விவசாயம் செய்கிறார்களாம். வயலாகத் தடுக்கிறார்களாம். கோதுமை, நெல் இவற்றை விதைக்கிறார்களாம். இதுவரை நாங்கள் காதுகளால் கூடக் கேட்டது கிடையாது. எங்களுடைய முன்னோர்கள் பூமி மாதாவை இந்த மாதிரிப் பிளந்தது கிடையாது; அவளை அவமானப் படுத்தியது கிடையாது. பூமாதேவி, நம்முடைய ஆடு மாடுகள் குதிரைகளுக்குப் புல் கொடுக்கிறாள். நமக்குக் காய், கனி கிழங்குகள் கொடுக்கிறாள். காய்கனிகள் பறிக்கப் பறிக்கக் குறையாது. ஆனால் இந்தக் கீழ் மத்ரர்களும், பர்ஷுக்களும் செய்கிற பாபத்தினாலும் அவர்களைப் பார்த்து நாம் செய்கிற பாபத்தினாலும் முன்னே இடுப்பு வரை உயரமாக வளர்ந்திருந்த புற்கள் இப்பொழுது அவ்வளவு உயரம் வளர்வதில்லை. முன்னாளைப் போன்று கொழுத்த கால்நடைகளை, இப்பொழுது காண முடிவதில்லை. எங்கள் மத்ரகுலம் முழுவதுக்கும் ஒருநாள் உணவுக்குக் காணக் கூடிய அத்தனை பெரிய மாடுகள் அன்று இருந்தன. காட்டிலே திரிகின்ற மான், கரடி முதலியவைகளுங்கூட முன் மாதிரிப் பெரியதாய் இல்லை. மனிதர்களைத் தான் பாரேன், முன் மாதிரி வெகு காலம் வரை உயிரோடிருக்கிறார்களா? இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? பூமா தேவியின் கோபந்தான்.”
“தாத்தா! இதுவரை நீங்கள் எத்தனை பனிக்காலத்தைப் பார்த்திருக்கிறீர்கள்?”
“நூறுக்கு மேலும் இருக்கும். அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்திலே, பத்துக் குடிசைகள் இருந்தன. இப்பொழுது மண்ணாலும், கற்களாலும் சுவர்கள்
எழுப்பிய நூறு வீடுகள் இருக்கின்றன. வயல்கள் இல்லாத போது எங்களுடைய கிராமமும், குடிசைகளும், இன்றைக்கு ஓரிடத்திலும் நாளைக்கு இன்னோரிடத்திலுமாக இருக்கும். வயல்கள் வந்தன. அவற்றில் விதைத்திருக்கிற கோதுமையை மான்களும் மற்ற மிருகங்களும் அழித்து விடாமல் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இந்த வயல் என்றால் என்ன? இந்த விவசாயம் என்றால் என்ன? மனிதனை ஒரே இடத்தில் கட்டி வைக்கிற முளை. அவைகளைப் போட்டுவிட்டு அவன் எங்கேயும் போக முடியாது. மனிதன் ஒரே இடத்தில் இருப்பதற்காகப் படைக்கப்படவில்லை. தேவதைகள் மனிதர்களுக்காகச் செய்யாத காரியங்களை, இந்தக் கீழ் மத்ரர்களும் பர்ஷீக்களும் செய்து காட்டி விட்டார்கள்.
“தாத்தா நாம் விரும்பினால், இந்த விவசாயத்தை விட்டுவிட முடியுமா? இப்பொழுது நமக்கும் பாதி உணவு தான்யமாயிருக்கிறது!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 72, புத்தகங்கள், இப்பொழுது, கிடையாது, பக்கம், இதுவரை, மாதிரிப், என்ன, கங்கை, வால்காவிலிருந்து, முன், எங்கள், இருந்தன, என்றால், இடத்தில், நாம், வயல்கள், இருக்கும், “தாத்தா, இந்தக், விவசாயம், “ஆம், பூமி, சிறந்த, எங்களுடைய, மாடுகள், செய்கிற, மத்ரர்களும், கீழ், கொடுக்கிறாள், பாபத்தினாலும்