வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 52
“ஆனால் நான் உன்னைக் கவர்ந்துகொண்டு போக விரும்ப வில்லை.”
“நான் ஆயுதம் எடுத்து யுத்தம் செய்ய அனுமதிப்பாயா?”
“என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட அளவில்.”
“வேட்டையாடுவதற்கு?”
“என்னால் முடிந்தவரை.”
“முடிந்தவரை என்றால்?”
“ஏனெனில் சமூகத் தலைவரின் உத்தரவிற்கு நான் கீழ்ப்படிய வேண்டும். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை, உனக்குப் பூரண சுதந்திரம் உண்டு.”
“காதலிலும் கூடவா?”
“காதல்! மதுரா, காதல்தான் நம்மிருவரையும் பிணைப்பது. ஆயினும் அதிலும் உனக்குச் சுதந்திரம் உண்டு.”
“அமிர்த! உன்னுடைய காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”
“இப்போது நீ எங்கே போக விரும்புகிறாய்? எங்கள் கிராமத்திற்கா அல்லது உங்கள் கிராமத்திற்கா?”
“உன்னுடைய விருப்பப்படி.”
உடனே அமிர்தாஸ்வன், தன்னுடைய குதிரையைத் திருப்பி பக்த ஜனங்களுடைய கிராமத்தை அடைந்தான். அந்தக் கிராமம் முழுவதும் ஒரே கலவரமாயும் கூக்குரலாயும் இருந்தது; பலர் மாண்டு கிடந்தனர்; சிலர் காயமுற்றுக் கிடந்தனர்; சிலருடைய பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டிருந்தனர்; மதுராவின் தாய் வாய் விட்டு அழுது கொண்டிருக்கிறாள். தந்தை விசனமே உருவாய் உட்கார்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் அமிர்தாஸ்வனுடைய குதிரை அவர்களுடைய வீட்டுக்கு முன்னால் போய் நின்றது.
குதிரையை விட்டு அமிர்தாஸ்வன் முதலில் கீழே இறங்கினான். அடுத்துக் கீழே குதித்த மதுரா, அவனை அங்கேயே நிறுத்தி விட்டு வீட்டிற்கு உள்ளே சென்றாள். திடீரென்று தங்கள் முன் வந்து நிற்கும் மகளைக் கண்ட தாய் தந்தையருக்கும் முதலில் நம்பவே முடியவில்லை. மதுராவின் தாய் அவளைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீரால் மதுராவின் உடம்பு பூராவையும் நனைத்துவிட முயன்றாள். தந்தை தன் மனைவியை சாந்தப் படுத்திவிட்டுப் புத்திரியிடம் நடந்தவற்றை விளக்கமாகக் கூறும்படி கேட்டார்; மதுராவும் சொல்ல ஆரம்பித்தாள்.
“வால்ஹீகர் கிராமத்தார் நம் யுவதிகளைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடிய பொழுது, என்னைத் தூக்கிச் சென்றவன் பின்தங்கிவிட்டான். சமயம் பார்த்து நான் குதிரையிலிருந்து கீழே குதித்துத் தப்ப முயன்றேன். திரும்ப என்னைக் குதிரை மீது ஏற்றுவதற்கு அவன் முயற்சித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 52, புத்தகங்கள், நான், தாய், பக்கம், கீழே, விட்டு, கங்கை, மதுராவின், வால்காவிலிருந்து, முதலில், கொண்டு, தூக்கிச், குதிரை, தந்தை, கிராமத்திற்கா, உன்னுடைய, “நான், சிறந்த, சுதந்திரம், உண்டு, தன்னுடைய, அமிர்தாஸ்வன், மதுரா, கிடந்தனர்