வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 51
“வேட்டையாடியா! அப்படியானால் அவர்களுக்குப் பால் எங்கிருந்து கிடைக்கும்?”
“குழந்தைகள் இளமையில் தாய்மாரிடம் குடிக்கும் பாலைத் தவிர வேறு பால் ஏது?”
“குதிரை ஏற்றங்கூடத் தெரியாதா?”
“இல்லை. மிருகங்களின் தோல்களைத் தவிர வேறு ஆடைகளையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.“
“இந்த வாழ்க்கை அவர்களுக்குத் துன்பமாயில்லையா?”
“ஆனால் அங்கே ஆண்கள் எப்படியோ அப்படியே பெண்களுக்கும் பூரண சுதந்திரம் உண்டு. பெண்களும் காய் கனிகளைச் சேகரிக்கிறார்கள். வேட்டையாடுகிறார்கள். யுத்தத்தில், ஆண்களைப் போலவே பெண்களும் ஆயுதங்கள் எடுத்துச் சண்டை செய்வார்கள்!”
“எனக்குக் கூட இது ரொம்பப் பிடித்திருக்கிறது. நானும் அம்பு தொடுக்கப் படித்திருக்கிறேன். ஆனால் ஆடவர்களைப் போலவே யுத்தகளத்திற்குப் போவதற்கு எங்களுக்குச் சந்தர்ப்பம் எங்கே கிடைக்கிறது?”
“இங்கே ஆடவர்கள் இந்தத் தொழிலைத் தங்களுடையதாக மட்டும் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். மதுரா, இவர்கள் ஆடு மாடுகள், குதிரைகள் முதலிய மிருகங்களை வைத்துப் போஷித்து வருகிறார்கள்; தங்கள் வயிற்றுப் பசியைத் தீப்பதற்காக. ஆனால் பெண்களை வீட்டிலே வைத்துப் போஷித்து வருகிறார்கள்; தங்கள் உடற்பசியைத் தீர்ப்பதற்காக.”
“ஆமாம்; ஆமாம். யுவதிகளைச் சுலபமாகத் திருடிக் கொண்டு போவதற்கு லாயக்காகவும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அந்தச் சமூகத்தில் யுவதிகள் இந்த மாதிரிக் களவாடப் படுவதில்லையே?”
“அங்கே ஒரு சமூகத்திலே பிறக்கும் ஆண்களும், பெண்களும் அதே குடும்பத்திலேயே வாழ்கிறார்கள். பெண்களை வெளியே கொடுப்பதும், கொள்வதும் இல்லை.”
“இது என்ன வேடிக்கை!”
“ஆம்; மதுரா! அந்த நியமம் இங்கு ஒத்து வராது.”
“இங்கு பெண்களைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்களே, இது நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டியது தானா?”
“சரி, இவைகளிருக்கட்டும்; மதுரா! இப்பொழுது என்ன சொல்கிறாய்?”
“எதைப்பற்றி?”
“என்னுடைய காதலைப் பற்றி!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 51, புத்தகங்கள், மதுரா, பக்கம், பெண்களும், வால்காவிலிருந்து, கங்கை, தங்கள், வைத்துப், பெண்களை, என்ன, கொண்டு, போவதற்கு, வருகிறார்கள், போஷித்து, தவிர, மிருகங்களை, “அங்கே, சிறந்த, அவர்களுக்குத், காய், வேறு, பால், போலவே