வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 50
“கூச்சப்படாதே! உன் வாயால் அமிர்தன் என்றே அழை. அதுதான் எனக்குப் பிரியமாக இருக்கிறது. அந்தச் சமூகம் இங்கிருந்து மேற்குத் திசையில் வெகு தூரத்தில் இருக்கிறது.”
“அமிர்த! நீ அங்கு போயிருக்கிறாயா?”
“ஆம்! காடுகளிலே சுதந்திரமாகத் திரியும் விலங்குகளைப் போல், தங்கள் விருப்பம் போல் பறந்து திரியும் பறவைகளைப் போல, பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் அங்கே சுதந்திரமாயிருக்கிறார்கள். யாருக்கும் யாரும் சொந்தமென்பதில்லை.”
“அப்படியானால், ரொம்ப நல்ல சமூகமாகவல்லவா இருக்கிறது! அங்கே பெண்களை யாரும் திருடுவது இல்லையே?”
“தன் மனம் போனபடி, காட்டிலே திரியும் பெண் புலியை உயிரோடு திருடுவதாவது, யாராலே முடியும்?”
“ஆடவர்கள்?”
“அவர்களும் சுதந்திர புருஷர்களே.”
“குழந்தைகள்?”
“மதுரா! அங்கே வசிப்பவர்களின் நடவடிக்கையே வேறு விதம். ஒரு கிராமம் என்றால் வீடுகள் தோறும் தனித்தனிக் குடும்பங்கள் என்பது அங்கே கிடையாது. ஒரு கிராமம் பூராவும் ஒரே குடும்பந்தான்.”
“இந்தக் குடும்பத்தில் தகப்பனுடைய கடமை?”
“தகப்பனா! மதுரா, யாரை யாருக்குத் தகப்பன் என்று சொல்லுவது! ஒரு பெண், ஒருவனுக்கே மனைவியென்பது அங்கு கிடையாது; அவளுடைய காதலுக்குக் கட்டுக் கிடையாது.”
“அப்படியானால் அங்கே யாருக்கும் அவர்களுடைய தகப்பன் இன்னார் என்பதே தெரியாதா?”
“அந்த வீட்டிலுள்ள ஆடவர் எல்லோரும் தந்தையர்கள் தான்!”
“இது என்ன விநோதப் பழக்கம்?”
“அங்கே பெண்களுக்கும் பூரண சுதந்திரம் உண்டு! ஆண்களைப் போலவே பெண்களும் அங்கே யுத்தம் செய்வார்கள்; காட்டில் வேட்டையாடுவார்கள்.”
“மாடு, குதிரை இவைகளை வளர்ப்பது?”
“மாடுகளை, குதிரைகளை அங்கு வளர்ப்பதில்லை. இங்கே மான்கள் எப்படிக் காடுகளில் எதேச்சையாகத் திரிகின்றனவோ, அப்படியேதான் அங்கு மாடுகளும் குதிரைகளும்.”
“ஆடுகளையுங் கூடவா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 50, அங்கே, புத்தகங்கள், அங்கு, இருக்கிறது, பக்கம், கிடையாது, திரியும், கங்கை, வால்காவிலிருந்து, “அப்படியானால், பெண், கிராமம், தகப்பன், யாரும், யாருக்கும், “அமிர்த, சிறந்த, போல், தங்கள், சமூகம்