வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 342
“சங்கர்! எந்த ஒரு புரட்சிக்கும் சக்தி இரண்டு விஷயங்களின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஒன்று உலகத்தின் நிலைமை-நிகழ்ச்சிகள், அந்தப் புரட்சியைத் தூண்டுவதற்கு எவ்வளவு தூரம் காரணமாயிருக்கிறது என்பது; மற்றொன்று நாட்டிலுள்ள அதிகப் புரட்சிகரமான வர்க்கம் அதில் எவ்வளவு தூரம் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது. முதலாவது விஷயத்திற்குச் சில உதாரணங்கள் முன்னே கூறினேன். இரண்டாவது விஷயத்தின் சக்தி தொழிலாளர்கள்-விவசாயிகள், யாரிடம் இழப்பதற்கு மிகக் குறைவான பொருள்கள் இருக்கிறதோ, அவர்கள்தான் புரட்சிப்போரை நடத்த முடியும். சகீனாவின் லிப்ஸ்டிக், இந்தப் பங்களா, தந்தையாரின் இந்த ஜெமீன் கிராமங்கள், இவைகளை எல்லாம் இழந்துவிட நேருமே என்ற பயமுள்ளவன்,
புரட்சிப் போர் வீரனாக ஆக முடியாது. ஆகையால், சாதாரண ஏழைப் பொது ஜனங்கள்தான் புரட்சியின் சக்தியாக இருக்க முடியும்.”
“இவற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்.”
“நல்லது, சாதாரணப் பொது ஜனங்களிடம் இன்று ஏற்பட்டுள்ள விழிப்பை நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய், மற்றொரு புறம், உலகத்தின் நிகழ்ச்சிகளும் தூண்டிக் கொண்டிருக்கின்றன. கடந்த மகாயுத்தம் (1914-18) உலகத்திலேயே ஒரு பெரிய நெருப்பைக் கொளுத்திவிட்டது. சாம்ராஜ்யக் கொள்கையினாலும், ஏராளமாகக் குவிந்திருக்கும் முதலுக்கும் உற்பத்திப் பொருளுக்கும் பாதுகாப்பான சந்தையைப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது பறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலினாலுமே, அந்த யுத்தம் தோன்றிற்று. ஜெர்மனி புதிய குடியேற்றங்களை வேண்டிற்று. ஆனால் பூவுலகமோ ஏற்கனவே பிரிக்கப்பட்டு முடிந்துவிட்டது. ஆகவே அவைகளைப் போராடித்தான் பறித்துக் கொள்ள வேண்டும். குடியேற்ற நாடுகளின் சொந்தக்காரர்களான இங்கிலாந்தோடும் பிரான்ஸோடும் ஜெர்மனி யுத்தம் தொடங்கிற்று. யுத்தத்திலே ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டு விட்டதென்றாலும், சாம்ராஜ்யக் கொள்கையின் வேரையே அசைத்தெடுக்கும் ஒரு புதிய விரோத சக்தி உற்பத்தியாகி விட்டது-பொருள்களை லாபத்திற்காக உற்பத்தி செய்யக் கூடாது, மனித சமுதாயத்தைச் சுகமாகவும் கௌரவமாகவும் வாழ்விக்கச் செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற பொது உடைமைக் கொள்கை தோன்றிவிட்டது. இயந்திரங்கள் நாள்தோறும் வளர்ச்சியடையும் தொழிற்சாலைகளும் பெருகும். அதன் மூலம்
பொருளுற்பத்தியும் அதிகரிக்கும். அதற்குத் தக்கபடி அதிகமான சந்தைகளும் வேண்டும். மேலும், பொருளை வாங்குவதற்குப் போதுமான பணமும் இருக்க வேண்டும். பணம் எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு குறைவாகவே பொருள்களும் வாங்கப்படும். அதிகப்பொருள்கள் கடையிலோ அல்லது கிடங்குகளிலோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 342, வேண்டும், புத்தகங்கள், சக்தி, பக்கம், எவ்வளவு, கொள்ள, ஜெர்மனி, வால்காவிலிருந்து, கங்கை, பொது, சாம்ராஜ்யக், பறித்துக், உற்பத்தி, யுத்தம், இருக்க, அல்லது, என்பது, இந்தப், ஆகவே, சிறந்த, கூடாது, உலகத்தின், இருக்கிறதோ, தூரம், முடியும்