வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 315
“நான் இப்பொழுது சொல்லிய விஷயங்களைப் பொறுத்த அளவில் அதுதான் உண்மை. ஆனால் நான் இந்தியாவை விட்டுப் புறப்படும் பொழுது
என் மனத்தில் இரண்டே இரண்டு எண்ணங்கள் தான் இருந்தன. ஒன்று எனது இஷ்ட தெய்வமான ஏசுநாதரின் பக்தர்கள் நிறைந்துள்ள தேசத்தைப் பார்க்க வேண்டுமென்பது; மற்றொன்று என் முன்னோர்கள் இழந்து விட்ட ராஜ்ய லெட்சுமியைத் திருப்பிப்பெற முயற்சி செய்ய வேண்டுமென்பது.”
“உன்னைப்பற்றிய முழு விபரங்களையும் உன்னிடம் கேட்கவேண்டுமென்று எத்தனையோ முறை நான் நினைத்தேன். ஆனால் எப்படியோ தள்ளிக் கொண்டு போய்விட்டது. முடியுமானால் இன்று சொல்.”
“என்னுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்ட உன்னிடம் சொல்வதற்கு எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? அன்பே ஆனி! நட தேம்ஸ் நதியின் அந்த அமைதி நிறைந்த கரைக்குச் செல்வோம். எங்கள் கங்கையைப் போன்று அவ்வளவு பெரியதும் அழகு நிறைந்துமல்ல இந்தத் தேம்ஸ். ஆயினும் தேம்ஸ்நதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் கங்கையின் இனிய நினைவு வந்து விடுகிறது. கிருஸ்துவர்கள் பரமபிதா ஏசுவின் தந்தையைத் தவிர வேறு எதையும் வணங்குவதை அஞ்ஞானம் என்று கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தத் தேம்ஸ் ஒருமுறை என்னைக் கிறிஸ்துவத் தன்மையிலிருந்து மறுபடியும் அஞ்ஞானியாக்கிவிட்டது. என்னுடைய ஹிந்து அஞ்ஞானித் தாய் மிகுந்த பக்தியோடு மலர்தூவி கங்கையை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”
இருவரும் தேம்ஸின் கரையை அடைந்துவிட்டார்கள்; அங்கிருந்த ஒரு கல் ஆசனத்தின் மீது தேம்ஸ் நதியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தனர்.
வெள்ளைத் தொப்பிக்குள்ளிருந்து வெளிவந்து கன்னங்களிலே தொங்கும் ஆனியின் பொன்னிறமான கூந்தல் காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. மங்களசிங் அவளை முத்தமிட்டுவிட்டுத் தன்னுடைய பேச்சைத் தொடங்கினான்.
“இந்தத் தேம்ஸின் கரையிலே பலமுறை நான் எங்கள் கங்கைக்கு மானஸிகமாக மலர் தூவி இருக்கிறேன்.”
“உன் தாயார் கங்கைக்கு மலரிட்டு வணங்குவாளா?”
“ஆம்; மிகுந்த பக்தியோடு, கிறிஸ்துவர்கள் ஏசுநாதரிடம் எவ்வளவு சிரத்தை காட்டுகிறார்களோ, அவ்வளவு சிரத்தையோடும் நான் கிருஸ்தவனாக, மாறிய ஆரம்ப காலத்தில் இது வெறுக்கத்தக்க, விஷயமென்று கருதினேன். ஆனால் இப்பொழுது எத்தனையோ முறை முன்பு கங்கையைப் பற்றி என் மனத்திலே எழுந்த குறைவான நினைவிற்காகப் பச்சாதாபப்பட்டிருக்கிறேன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 315, புத்தகங்கள், நான், தேம்ஸ், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, வணங்குவதை, அவ்வளவு, இந்தத், பக்தியோடு, கங்கைக்கு, தேம்ஸின், கங்கையைப், மிகுந்த, எத்தனையோ, இப்பொழுது, சிறந்த, வேண்டுமென்பது, விட்ட, முறை, உன்னிடம், எங்கள்