வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 285
அக்பர்-“அது அசல் நாணயமா அல்லது போலி நாணயமா என்பதை, நீ காண்பிக்கும் முன்னால் நாங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?”
பீரபல்-“என்னுடைய ஒவ்வொரு கதையிலும் முத்திரை இருக்கவே செய்கிறது, நல்லது. உங்கள் விருப்பப்படி இப்பொழுது ஒரு கதையைச் சொல்லுகிறேன். விஷயத்தை மட்டும் சுருக்கிச் சொல்லுகிறேன்.”
“அக்பருக்கு ஹிந்துவாக வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவர் பீரபல்லிடம் அந்த ஆவலைச் சொன்னார். பீரபலுக்கு ரொம்பச் சங்கடமாய்ப் போய்விட்டது. பாதுஷாவை மறுத்துச் சொல்லவும் முடியாது. ஹிந்துவாக்குவதும் நடக்கக்கூடிய காரியமல்ல. ஆறு, ஏழு நாட்கள் ஒளிந்து கொண்டு இருந்தார். ஒரு நாள் அந்தி நேரத்தில் பாதுஷாவின் மாளிகை பின் ஜன்னலுக்குப் பக்கத்தில் ‘ஹிச்சோ-ஹிச்-சோ’ என்ற சப்தம் கேட்டது. ராஜமாளிகைக்குப் பக்கத்திலே, அதுவும் இந்த நேரத்திலே யாரும் துணி துவைக்கத் துணியமாட்டார்கள். அது யாரென்று அறிய வேண்டுமென்ற ஆவல் பாதுஷாவிற்கு ஏற்பட்டது. உடனே ஒரு வேலைக்காரனின் உடையைத் தரித்துக் கொண்டு, அவர் யமுனையின் கரையை அடைந்தார். என்ன மாறுவேடம் போட்டிருந்தாலும், பீரபலைக் கண்டு பிடிப்பது பாதுஷாவிற்குச் சிரமமான காரியமல்ல. பீரபல் அங்கே கல்லின் மீது துணியைத் துவைத்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு முரட்டுக் கழுதையைப் பிடித்து, உவர் மண்ணையும் செங்கல்லையும் போட்டுத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தார். பாதுஷா தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு குரலை மாற்றி, “என்னப்பா என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
“நீ உன் வேலையைப் பார், உனக்கென்ன வந்தது இதெல்லாம்.”
“நேரங்கெட்ட நேரத்தில், நடுங்கும் குளிரிலே நின்று கொண்டு என்னப்பா செய்கிறாய்?”
“சாகத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? நாளையே இதைக்
குதிரையாக்கிப் பாதுஷாவிற்குக் கொடுக்க வேண்டும்.”
“கழுதையைக் குதிரையாக்கவா?”
“என்ன செய்வது? இதுதான் பாதுஷாவின் உத்தரவு.”
உடனே பாதுஷா சிரித்து விட்டார். “நல்லது பீரபல்! எனக்குப் புரிந்துவிட்டது. “முஸல்மானை ஹிந்துவாக்குவதும் கழுதையைக் குதிரையாக்குவதும் ஒன்றுதான்” என்று கூறினார் என்று ஒரு கதை கேள்விப்பட்டேன்.”
“பஜலு! இந்தக் கதையைக் கேட்டதும் என் உடம்பிலே சர்ப்பம் தீண்டியது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது.”
அக்பர்-“நாம் வாழ்க்கையின் மாலைப் பொழுதிலே இந்தக் கதையைக் கேட்கிறோம். நமது வாழ் நாள் முழுவதும் செய்த முயற்சியின் பலன் இதுதானா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 285, புத்தகங்கள், கொண்டு, என்ன, பக்கம், ஏற்பட்டது, பீரபல், கங்கை, வால்காவிலிருந்து, பாதுஷாவின், உடனே, கதையைக், இந்தக், நேரத்தில், வேண்டும், பாதுஷா, செய்வது, ஹிந்துவாக்குவதும், நாணயமா, அக்பர், சிறந்த, சொல்லுகிறேன், வேண்டுமென்ற, காரியமல்ல, அவர், நாள்