வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 276
“இவையெல்லாம் சுல்தானின் தயவு. இல்லையெனில் சித்தேயாகவும், மங்கேயாகவும் இருப்போம்.”
“இதைத்தான் இந்த பண்டிட்ஜீக்கு நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.”
“நம்முடைய இந்தப் பஞ்சாயத்தும் திரும்பி வந்திருக்காது, நமக்கு நல்ல நாளும் ஏற்பட்டிருக்காது.”
“சௌதரி மங்கள்ராம்! உனக்குப் பேனாவைப் பிடிக்கக்கூடத் தெரியாது. அப்படியிருந்தும் நீ பஞ்சாயத்து அங்கத்தினனாக ஆகிவிட்டாய். காரியங்களை எப்படி நடத்திச் செல்கிறாய்-நிர்வாகிகள் நிர்வாகிகள்தான். அந்தப் பணியாக்கள் இருந்தார்களே, அவர்கள் ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் உறிஞ்சிக் கொண்டு போய்விடுவார்கள். ஆடி மாதம் முடிவதற்குள்ளேயே வீட்டில் பானைகளை எலி உருட்டத் தொடங்கிவிடும். அடுப்பும் புகையாது.”
“அதனால்தான், நம் சுல்தான் ஆயிரம் வருடம் வாழவேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.”
வழிப்போக்கனான பிராமணன், இந்த முட்டாள் விவசாயிகளின் புகழுரைகளைக் கேட்டுக் கேட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தான். சிறிது வெல்லத்தைத் தின்று தண்ணீரைக் குடித்தபிறகு, தான் ஏதாவது பேசுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இந்தச் சௌதரிகளின் பேச்சு முடிவடையாது என்று தோன்றவே, மத்தியிலே பேசத் தொடங்கினான்.
“சுல்தான் அல்லாஉதீன் உங்களுக்குப் பஞ்சாயத்தைக் கொடுத்தார்...”
“ஆம் பண்டிட்ஜீ! உங்கள் வாயிலே சர்க்கரை போட வேண்டும். ஆனால் பண்டிட்ஜீ! யாரோ நம்முடைய சுல்தானுக்கு “அலாபதீன்” (லாபமில்லாதவன்) என்று பெயர் வைத்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் கிராமத்தில் அவரை ‘லாபதீன்’ (லாபகரமானவன்) என்று தான் அழைக்கிறோம்.”
“சௌதரி! நீ எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள். ஆனால், சுல்தான் ஹிந்துக்களுக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”
“எங்கள் அஹிர் பெண்கள் மேல்போர்வை கூடப் போர்த்தாமல்தான் திரிகிறார்கள். இரவும் பகலும், வயல்களிலேதான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் தூக்கிக் கொண்டு போகவில்லையே?”
“மரியாதை உள்ள குடும்பங்களின் மரியாதையை அழிக்கிறார்கள்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 276, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, கொண்டிருந்தான், தான், சுல்தான், பெயர், பண்டிட்ஜீ, எவ்வளவு, சிறந்த, சௌதரி, நான், “சௌதரி, கொண்டு