வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 258
தானம் வாங்கிச் செல்லும் பிராமணர்கள் வீட்டிலே ஒன்று அல்லது இரண்டு சக்களத்திகள்தான் இருப்பார்கள். பதினாயிரம் பெண்களின் கூட்டமிருக்காதல்லவா? இதையும்கூட நான் அடிமைத்தனம் என்றே கருதுகிறேன். பெண்கள் என்ன சொத்தா, தானம் கொடுப்பதற்கும்-பூட்டி வைப்பதற்கும்?”
“நாமும் ஒன்று சேர்ந்து துருக்கர்களை எதிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.”
“அது மகாராஜாவின் கையிலிருக்கிறது. சூழ்ச்சிக்கார ஸ்ரீ ஹர்ஷன் அவரை ஒட்டிக் கொண்டிருக்கிறான்.”
4
அஷ்டமி இரவு. கிழக்குத் திசையிலே இப்பொழுதுதான் சந்திரன் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறான். அவனுடைய ஒளி பூமியெங்கும் பரவ இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். எங்கோ தூரத்தில் கேட்கும் ஓர் ஆந்தையின் அலறலைத் தவிர எங்கும் நிசப்தம் பரவியிருக்கிறது. இந்த இருட்டு அமைதியிலே, இரண்டு மனிதர்கள் வேகமாக வந்து யமுனையின் தண்ணீரிலே இறங்குகிறார்கள். முழங்கால் தண்ணீரிலே நின்று கொண்டு விரல்களை வாயில் வைத்து மூன்று முறை சீட்டியடித்தார்கள். உடனே யமுனையின் எதிர்க் கரையிலிருந்து ஒரு படகு வருவது தெரிந்தது. சப்தமின்றி மிக மெதுவாக வந்த அந்தப் பெரிய படகு கரையை அடைந்ததும் இருவரும் படகிலே ஏறினார்கள். உள்ளே இருந்த ஒருவர், “சேனாநாயகன் மாதவனா” என்று கேட்டார்.
“ஆம்; ஆச்சாரியரே! ஆல்ஹணனும்கூட என்னுடன் வந்திருக்கிறான். குமார் எப்படி இருக்கிறார்?”
“இன்னும் நினைவு வரவில்லை. நான் அதற்காகவும் கொஞ்சம் மருந்து கொடுத்திருக்கிறேன். மறுபடியும் அவர் யுத்தகளத்திற்குக் கிளம்பிவிடக்கூடாதல்லவா?”
“ஆனால் ஆச்சாரியரே! அவர் உங்கள் உத்தரவை எப்பொழுதும் மீறமாட்டாரே.”
“அது எனக்குத் தெரியும். ஆயினும் அயர்ந்து தூங்குவதால் காயத்தில் வலியும் தெரியாமலிருக்கும்.”
“காயம் ரொம் அபாயகரமானதா ஆச்சாரியரே?”
“இல்லை சேனாநாயக காயத்தைத் தைத்து, ரத்தப் பெருக்கையும் நிறுத்திவிட்டேன். பலவீனம் அதிகமாயிருக்கிறது. ஆயினும், பயம் ஒன்றுமில்லை. நல்லது; இப்பொழுது நீங்கள் என்ன செய்து வந்திருக்கிறீர்கள்? மகாராஜாவின் பிரேதத்தை அந்தப்புரத்திற்கு அனுப்பி விட்டீர்களா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 258, புத்தகங்கள், ஆச்சாரியரே, பக்கம், தானம், வால்காவிலிருந்து, கங்கை, தண்ணீரிலே, யமுனையின், கொஞ்சம், படகு, ஆயினும், அவர், என்ன, ஒன்று, சிறந்த, இரண்டு, நான், “அது, மகாராஜாவின்