வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 243
பாவம், சீலாதித்தியனை மட்டும் ஏன் நான் குறை சொல்ல வேண்டும். இப்பொழுது உயர்ந்தவர்கள் நகரவாசிகள் ஆவதற்குரிய லட்சணம் பிறரை ஏமாற்றுவதுதான். பழைய பௌத்தநூல்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்தக் காலத்தில், மதுவருந்துவது தண்ணீர் குடிப்பதைப் போலவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ பிராமணர்கள் மதுவருந்துவதைத் தடை செய்திருக்கிறார்கள். ஆகவே, பகிரங்கமாகக் குடிப்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். இதன் விளைவென்ன? தேவதைகளின் பெயரால் சித்தி சாதனையின் பெயரால் இதை மறைப்பதற்காகப் பைரவிச் சக்கரம்* அல்லது வாம மார்க்கம் என்ற புது மதம் தோன்றியிருக்கிறது. பிரம்மச்சரியம் என்று கூச்சல் போடுகிறார்கள். அதன் விளைவென்ன? பைரவிச் சக்கரத்திலே தன் மனைவி பிறர் மனைவி என்ற வேற்றுமையின்றி, எல்லாப் பெண்களையும் ஒன்றாகவே கருதுகிறார்கள். அதுமட்டுமா? தேவதைகளின் வரம் என்ற பெயரால் தாய், சகோதரி, மகளையும்கூடத் தள்ளுபடி இல்லையென்று செய்துவிட்டார்கள். இது தொலையட்டும். சந்நியாசிகளின் மடமும், பிக்ஷு க்களின் மடமும் இயற்கைக்கு விரோதமான விபசாரத்தின் விடுதியாக ஆகிவிட்டது. உண்மையிலே இந்த உலகத்தைக் கண்காணிப்பவன் ஒருவன் இருப்பானாகில், இந்த ஏமாற்றத்தையும்
அயோக்கியத்தனத்தையும் ஒரு வினாடி கூடச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான்.
ஒருமுறை நான் காமரூப(அஸ்ஸாம்)த்திற்குப் போய்வந்தேன். அந்த நாட்டரசன் நாளந்தா கலாசாலையிடம் அதிக அன்பும், புத்த மதத்திலே சிரத்தையும் உடையவன், நான் அவனோடு பேசத் தொடங்கினேன்.
“மஹாயானியர்கள்”** போதி சத்துவரின் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறவர்கள். அவர்களுடைய கொள்கைகளிலே ஒரு உயிராவது அடிமைப்பட்டிருக்கும் வரை எனக்கு நிர்வாணம் (மோட்சம்) வேண்டிய தில்லையென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அரசே! நகரத்திற்குள் வரும்பொழுது தங்களைத் தொடுவதால் மற்றவர்களின் புனிதத் தன்மை கெட்டுவிடாமல் எச்சரிக்கும்பொருட்டு, தங்கள் கையிலிருக்கும் தடியினால் பூமியைத் தட்டிச் சத்தமுண்டாக்கிக் கொண்டு வரும் சண்டாளர்கள் உங்கள் ராஜ்யத்தில் ஏராளமாயிருக்கிறார்களே! அவர்களின் எச்சில் விழுவதால் நகரத்தின் புண்ணிய பூமி கெட்டுவிடாமல் இருக்கும் பொருட்டு எச்சிற் பாத்திரங்களைக் கைகளிலே ஏந்திக் கொண்டு போகும்படி செய்யப்பட்டிருக்கிறார்களே! நாயைத் தொடுவதால் மனிதனின் புனிதத் தன்மை கெட்டு விடுவதில்லை. நாய் மலங்கழிப்பதால் நகரத்தின் பரிசுத்தம் போய்விடுவதில்லை. நாயைவிடக் கேவலமானவர்களா இந்தச் சண்டாளர்கள்?”
____________________________________________________
* பைரவிச் சக்கரம்-மந்திர தந்திரங்களை நம்பும் ஒரு கூட்டம். துர்தேவதைகள் பூஜையும் மது மாமிச பட்சணமும் இவர்களிடையே உண்டு. ஜாதி
மதம் எவ்வித வேற்றுமையுமின்றி, உலகை ஆண், பெண் என்று இரண்டாகப் பிரித்தவர்கள்.
** மஹாயான் - பௌத்த மதத்தின் மூன்று கிளைகளுள் ஒன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 243, புத்தகங்கள், நான், பக்கம், பெயரால், பைரவிச், வால்காவிலிருந்து, கங்கை, கெட்டுவிடாமல், தன்மை, கொண்டு, நகரத்தின், புனிதத், சண்டாளர்கள், மடமும், தேவதைகளின், விளைவென்ன, மதம், மனைவி, சிறந்த, தொடுவதால்