வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 244
“அப்படியானால், நாளைமுதல் சண்டாளர்கள் நகருக்குள் வரும் பொழுது, கைத்தடியோ, எச்சிற்பாத்திரமோ கொண்டுவர வேண்டிய அவசியமில்லையென்று நீங்கள் ஏன் பறையறிவிக்கக்கூடாது?”
“அது என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்.”
“உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமா?”
“ஆம்; மத அமைப்புக்கள், ஏற்பாடுகள் அப்படியிருக்கின்றன.”
“போதி சத்துவரின் மதம் -மஹாயான் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறதா?”
“ஆனால், இங்குள்ள பிரஜைகள் எல்லோரும் மஹாயானைப் பின்பற்றுபவர்கள் அல்லவே.”
“கிராமங்களிலும் நகரங்களிலும் எங்கு பார்த்தாலும் திரிரத்னத்தின்* ஜெயத் தொனியைக் கேட்டேனே!”
“ஆம்; பேச்சளவிலே, நீங்கள் கூறியபடி முரசறைவித்தால், உடனே
அதை எதிர்ப்பவர்கள் ஆதிகாலந்தொட்டு நடந்துவரும் பழக்கத்தை அரசன் உடைக்கிறான் என்று ஜனங்களைத் தூண்டி, ஒரு பெரும் புயலையே கிளப்பி விடுவார்கள்.”
“போதிசத்துவரின் வாழ்க்கையின் உயர்வும், அவருடைய நல்லுபதேசங்களும் ஒரு சிலருடைய மனத்தையாவது கவர்ந்திருக்காதா? ஒரு சிலருடைய இதயத்திலாவது அதன் செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது என்று நான் கருதுகிறேன். போதி சத்துவரைப் போலவே நீங்களும் சகலத்தையும் துறந்துவிடத் தயாராகிவிட்டால், உங்களைப் பின்பற்றுபவர்களும் ஏராளமாகக் கிடைப்பார்கள்.”
“இது எனது உள்நாட்டு விஷயம் மட்டுமல்ல, பரமபட்டாரகரும் இதனால் கோபமடையக்கூடும்.”
“சீலாதித்திய ஹர்ஷனா, தனது ‘நாகாநந்தம்’ நாடகத்திலே, போதிசத்துவரின் திவ்ய சரித்திரத்தை வருணித்திருக்கும் அந்தப் பரம பட்டாரகனா?”
____________________________________________________
*திரிரத்னம்...1. புத்தம் 2. சங்கம் 3. தர்மம் மூன்றையும் பௌத்தர்கள் திரிரத்னம்-மும்மணிகள் என்று கருதுவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 244, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, “ஆம், சிலருடைய, விஷயம், நீங்கள், சிறந்த, சக்திக்கு, அப்பாற்பட்ட