வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 216
“அவசியம் இருக்கிறது தாத்தா! உண்மை விஷயத்தை நான் சரியான படி தெரிந்துகொண்டிருந்தால், நமது குலத்தைப் பற்றிக் குறை சொல்லுகிறவர்களுக்குச் சரியான பதில் கொடுக்க முடியும். நான் பிராமணர்களின் கல்வியைப் போதிய அளவு கற்றுத் தெரிந்துகொண்டேன். நமது குலத்தின்
கௌரவத்தைக் காப்பாற்றக்கூடிய அளவு எனது அறிவும் திறமையும் இருக்கிறது.”
“அந்த நம்பிக்கை எனக்குண்டு. குழந்தாய்! உன் தாய்-பாவம் அவளுக்கே நமது குலத்தைப் பற்றி பூரா விபரமும் தெரியாது. நமது முன்னோர்கள் எப்படியோ இந்த நாகர்களோடு கொள்வினை கொடுப்பினைகளை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். இப்பொழுது நம்முடைய சம்பந்தம் பெரும்பாலும் அவர்களோடேயே இருக்கிறது. உன்னுடைய தலைமுறையை எடுத்துக் கொண்டால், அதில் யௌதேய ரத்தத்தைவிட நாக ரத்தமே அதிகம் என்று சொல்லவேண்டும். ஆகவே அவந்தியிலும் குஜராத்தியிலும் அதிக எண்ணிக்கையிலே இருக்கும் இந்த நாகர்களோடுதான் நமது வாழ்வும் தாழ்வும் பின்னிக் கிடக்கிறது.”
“யௌதேயர்* என்றால் என்ன தாத்தா?”
“அதுதான் நமது குலத்தின் பெயர். இந்தப் பெயரைக் கொண்டு தான், நம்மை ‘க்ஷத்திரியர்’ என்று இந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள்.”
“யௌதேயர் பிராமணர்களா, தாத்தா?”
“இந்தப் பிராமணர்களை விட அதிகமான சுத்த ஆரியர்கள்.”
“அப்படியானால் பிராமணர்கள் இல்லையா?”
“இந்தக் கேள்விக்கு, ஆம் அல்லது இல்லையென்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது. யௌதேயர்களைப் பற்றிய பூரா விபரங்களையும் உனக்குச் சொல்லுகிறேன். சத்லஜிற்கும் யமுனைக்கும்
மத்தியிலே ஹிமாலயத்திலிருந்து பாலைவனப் பிரதேசம் வரை பரவிக் கிடந்த பிரதேசத்திலே, யௌதேயர்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பூமிக்கு, அவர்களே எஜமானர்கள். ஆம், ஒவ்வொரு யௌதேயனும்.”
“ஒவ்வொரு யௌதேயனுமா?”
“ஆம்; அவர்களில் யாரும் அரசன் இல்லை. அவர்களுடைய ஆட்சிக்கு ஜன ஆட்சி என்று பெயர். ஜனசபை அல்லது பஞ்சாயத்து, ராஜ்யத்தின் எல்லாக் காரியங்களையும் நடத்தி வந்தது. அவர்கள், ஒரு தனி மனிதனுடைய அதாவது அரசனுடைய ஆட்சியை மிகவும் வெறுத்தார்கள்.”
“அப்படி ஓர் ஆட்சி இருந்ததாக நான் கேள்விப்படவே இல்லையே, தாத்தா!”
“ஆனால், அவ்வித அரசாட்சி இருந்தது உண்மை தான் குழந்தாய்! என்னிடம் யௌதேய ஜன ஆட்சியின் மூன்று வெள்ளிக் காசுகள் இருக்கின்றன. என் தந்தையார் தேசத்தைவிட்டு ஓடிவரும் பொழுது கொண்டுவந்த காசுகளில் என் பங்குக்குக் கிடைத்தவைகள்.”
___________________________________________________
* யௌதேயர் -யுத்தம் செய்கிறவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 216, நமது, புத்தகங்கள், தாத்தா, பக்கம், குழந்தாய், நான், இருக்கிறது, வால்காவிலிருந்து, கங்கை, யௌதேய, கொண்டு, பெயர், அல்லது, ஆட்சி, பூரா, தான், சரியான, என்ன, சிறந்த, உண்மை, குலத்தைப், அளவு, பதில், குலத்தின்