வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 215
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள், எனது தோழ மாணவன் ஒருவன் என்னை ‘க்ஷத்திரியன்’ என்று சொல்லிக் கேலி செய்தான். இப்பொழுதெல்லாம். நான் மற்ற மாணவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பது வழக்கம். அப்படியிருந்தும், அன்று அவன் காரணமின்றியே என்னை வம்புக்கிழுத்தான். நான் படிப்பிலே மிகச் சூடிகையாய் இருப்பதைப் பார்த்து ஏற்பட்ட பொறாமையைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? நான்
இப்பொழுது சுலபமாக உணர்ச்சிவசப்பட்டு விடுவதில்லை. இந்த மாதிரிக் குத்தல் பேச்சுக்களைக் கேட்டு, என் மனம் கோபம் அடைவதென்னவோ உண்மைதான். ஆனாலும் என்னை நான் அடக்கிக் கொள்ளப் பயின்று விட்டேன். என் பாட்டனாருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். எத்தனையோ தேசங்களைப் பற்றியும் யுத்தம், கலகம் முதலியவைகளைப் பற்றியும் நான் அவரிடம் அதிகம் கேட்டிருக்கிறேன். அவர் தான் தனது சகோதரர்களோடு முதன் முதலாக இந்தக் கிராமத்திற்கு வந்தவர் என்பதும் எனக்குத் தெரியும். இன்று எப்படியாவது அவரிடம் எங்கள் குலத்தைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு விடுவது என்று நிச்சயம் செய்து கொண்டேன். கிராமத்தின் கிழக்கெல்லையில் எங்களுக்கு ஒரு மாந்தோட்டம் இருந்தது. இவ்வருடம் நிறைய மாங்காய்கள் காய்த்திருந்தன. அவைகள் பழுப்பதற்கு இன்னும் கொஞ்சகாலம் இருக்கிறது. என்றாலும் காவலுக்காக அடிமை சோனா இப்பொழுதிருந்தே அங்கு குடிசை போட்டு விட்டாள். என் பாட்டனார் இந்தக் கிராமத்திற்கு வந்த புதிதில், ஒரு தெற்கு தேச வியாபாரியிடமிருந்து இந்த அடிமை சோனாவை நாற்பது வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினாராம். அப்பொழுதெல்லாம் அடிமைகளை விற்பதற்கும், வாங்குவதற்கும், தெற்கிலிருந்து அடிக்கடி வியாபாரிகள் வருவதுண்டாம், அப்பொழுது யுவதியாய் இருந்த சோனா அழகாயும் இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில், அடிமைப் பெண்களுக்கு இவ்வளவு அதிக விலை கிடையாது. கறுப்புக்கிழவி சோனாவின் தோல் இப்பொழுது சுருங்கி, அவள் மூஞ்சியெல்லாம் கோடுகள்
விழுந்து, தலையும் நரைத்துப் போய்விட்டது. ஆயினும் என் பாட்டனாரை அவள் எப்பொழுதும் கேலி செய்து கொண்டே இருப்பாள். அதுவும் அவர்கள் இருவரும் தனியே இருக்கும் சமயங்களில் மிக அதிகம். அவர்களைப் பற்றி, ஜனங்கள் ஏதேதோ சொல்லிக்கொள்கிறார்கள். மனைவியை இழந்த-ஆரோக்கியமுள்ள ஒரு கிழவனாரைப் பற்றி இப்படியெல்லாம் சந்தேகப்படுவது இயற்கைதானே!
தினந்தோறும் என் பாட்டனார் மாலையில் மாந்தோட்டத்திற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் மாலை, நானும் அவருடன் கிளம்பினேன். புத்திசாலியான தன் பேரனிடம் தாத்தாவிற்கு மிகுந்த அன்பு. பேசிக் கொண்டே போகும்பொழுது மெதுவாக பிரச்னையைக் கிளப்பினேன்.
“தாத்தா! நம்முடைய குலத்தைப் பற்றிய உண்மையான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஜனங்கள் நம்மைப் பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் க்ஷத்திரியர் என்று சொல்லிக் கேலி செய்கிறார்கள். தாயாரிடம் இதைப் பற்றிப் பல முறை கேட்டேன். அவள் சரியான பதில் சொல்லாமல் தட்டிக் கழித்துவிட்டாள்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 215, நான், புத்தகங்கள், அவள், பக்கம், பற்றி, என்னை, கேலி, கங்கை, வால்காவிலிருந்து, குலத்தைப், செய்து, அடிமை, சோனா, கிராமத்திற்கு, ஜனங்கள், பாட்டனார், கொண்டே, பற்றியும், சொல்லிக், நாள், சிறந்த, வழக்கம், இப்பொழுது, அதிகம், அவரிடம், இருக்கும், இந்தக்