வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 198
“பல மகத்தான தத்துவஞானிகள்! அவர்களைப் பற்றியெல்லாம் பிஷு தர்மரட்சிதர் உனக்குத் தெரிவிப்பார். ஆனால், அன்ப! பௌத்த தத்துவத்தைப் பற்றிக் கேட்டதும், வைராக்கியம் கொண்டு இந்தப் பிரபாவை விட்டு ஓடிவிடக்கூடாது” என்று கூறி பிரபா அவனைத் தனது நீண்ட கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டாள். யாரும் தன்னிடமிருந்து அவனைப் பறித்துக்கொள்ளாமல் தடுப்பதுபோல் இருந்தது அந்தச் செய்கை.
“கால்காராம் மடத்தில் அநேக விஷயங்கள் என்னையும் கவர்ந்தன. நம் நாடு முழுவதும் அந்தக் கால்காராம் மடத்தைப் போலவே இருந்தால்,
எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நான் நினைத்ததுண்டு.”
“இல்லை இல்லை. நீ என்னை விட்டுவிட்டுக் கால்காராம் மடத்திற்குப் போய்விடாதே.”
“உன்னை விட்டுவிட்டுப் போவதா? இந்த உடம்பிலே உயிர் இருக்கும்வரை முடியாது. அன்பே! அந்த மடத்தில் உள்ள வேற்றுமையற்ற தன்மையைப் பற்றித்தான் நான் பேசினேன். அங்கே கிரேக்க தர்மரட்சிதர், பாரசீக சுமன் போன்ற அந்நிய நாட்டுப் பேரறிஞர்களான பிக்ஷு க்களும் இருக்கிறார்கள், அவர்களுடன் கூடவே நம் நாட்டிலே பிறந்த பிராமணர்கள் முதல் பறையர்கள்வரை உள்ள பல குலத்தையும் சேர்ந்த பிக்ஷு க்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றாகவே வசிக்கிறார்கள்; ஒன்றாகவே சாப்பிடுகிறார்கள்; ஒன்றாகவே அறிவையும் சேகரிக்கிறார்கள். அங்கு நாம் பார்த்தோமே, அந்தக் கரிய நிறக் கிழட்டுப் பிக்ஷு. அவர் பெயரென்ன?”
“மகாஸ்தவீர் தர்மசேன். சாகேதத்திலுள்ள எல்லா மடங்களுக்கும் அவர்தான் தலைவர்.”
“அவர் பறையர் குலத்தில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டேன். அவர் முன்னிலையில், என் சித்தப்பா பிக்ஷு சுபகுப்தர் முழங்கால் மண்டியிட்டு வணங்குகிறார். உயர் குலப் பிராமணக் குடும்பத்திலே பிறந்த அறிவாளியான சுபகுப்தர் எங்கே? பறையர் குலத்திலே பிறந்த தர்மசேனர் எங்கே? இவ்விருவரையும் ஒன்றாகச் சேர்த்துக் கற்பனையாவது செய்ய முடியுமா?”
“மகாஸ்தவீர் தர்மசேனரும் பெரிய அறிஞர்; நிறையப் படித்தவர்.”
“நான் பிராமணர்களின் மத நோக்கோடு பேசுகிறேன்; பிரபா! அவர்களுடைய அதிகாரம் சொல்லும் படியாக இருக்குமானால், தர்மசேனர் மதத்தின் தலைவராகி வணங்குவதற்குரிய நிலைமையை அடைவது இருக்கட்டும் சாதாரண மனிதராகவாவது ஆகி இருக்கமுடியுமா?”
“பௌத்தர்கள் பிக்ஷு சங்கத்தைக் கடலோடு ஒப்பிடுகிறார்கள். கடலிலே போய்க் கலக்கும் நதிகளெல்லாம், தங்களுடைய தன்மையையும் உருவையும் இழந்து அதிலே ஐக்கியமாகி விடுவதுபோல் பிக்ஷு சங்கத்திலே சேரும் மனிதர்களெல்லாம் தங்கள் குலத்தையும் பெயரையும் விடுவித்து அதிலேயே ஐக்கியமாகி விடுகிறார்கள்.”
“ஆனால், பௌத்த குடும்பஸ்தர்களும் ஏன் அப்படியாகி விடு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 198, பிக்ஷு, புத்தகங்கள், பிறந்த, ஒன்றாகவே, பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, குலத்தையும், அவர், சுபகுப்தர், ஐக்கியமாகி, தர்மசேனர், எங்கே, பறையர், “மகாஸ்தவீர், உள்ள, பிரபா, பௌத்த, தர்மரட்சிதர், சிறந்த, மடத்தில், அந்தக், க்களும், நான், கால்காராம், இருக்கிறார்கள்