வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 188
சங்கீதம் முடிந்ததும் கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து செல்லத் தொடங்கினர். அஸ்வகோஷ் வெளியே வந்ததும், அவனுக்குப் பரிச்சயமான சில யுவர்களும்-யுவதிகளும் அவனைச் சூழ்ந்து நின்றனர். அவர்களில் பிரபாவும் ஒருத்தி எனச் சொல்லவும் வேண்டுமா? ஒரு வாலிபன் முன் வந்து,
“மகாகவி!”
“மகாகவியா? நான் சாதாரணக் கவிகூட இல்லையே!”
“என்மனத்திலே இருக்கிற உணர்ச்சியை வெளியிட அனுமதியுங்கள். கவிஞரே! சாகேதத்தில் இருக்கும் கிரேக்கர்களாகிய நாங்கள், ஒரு சிறிய நாடகசாலையை அமைத்திருக்கிறோம்.”
“நாட்டியம் ஆடுவதற்காகவா? எனக்கும் நாட்டியத்திலே விருப்பம் உண்டு.”
“நாட்டியத்திற்காக மட்டுமல்ல, நடிப்பதற்குங்கூட.”
“நடிப்பதா?”
“ஆம்; கிரேக்க முறையிலே உள்ள எங்களது நடிப்பு ஒரு விசேட அம்சமுடையது கவிஞரே; அதில் வெவ்வேறு காலம் வெவ்வேறு இடத்தைப் பற்றிய பிரதிபலிப்புள்ள சித்திரக்கலைகளை உபயோகிக்கிறோம். எல்லாச் சம்பவங்களையும் நேரில் நடப்பது போல் காட்ட முயற்சி செய்கிறோம்.”
“நான் சாகேதத்தில் பிறந்திருந்தும் இவ்வளவு சிறந்த நடிப்புக் கலையைப் பார்க்காமலிருந்தது வருந்துதற்குரிய விஷயம்.”
“எங்கள் நடிப்பைப் பார்ப்பவர்கள், இங்குள்ள சில கிரேக்கக் குடும்பத்தாரும், எங்களுடைய நண்பர்களும்தான். ஆகவே, பெரும்பாலான சாகேத வாசிகளுக்கு எங்கள் நடிப்பைப் பற்றி ஒன்றும் தெரியாது.”
“நாடகம் என்று சொல்லுங்கள்.”
“ஆம்; நாடகந்தான். இன்று நாங்கள் ஒரு நாடகம் போட போகிறோம். நீங்களும் வந்திருந்து அதைப் பார்க்க வேண்டுமென்பது எங்கள் ஆசை.”
“ஆனந்தமாக வருகிறேன். நீங்கள் என்னிடம் எல்லையற்ற அன்பு காட்டுகிறீர்கள்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 188, புத்தகங்கள், பக்கம், சிறந்த, கண்ணீர், கங்கை, வால்காவிலிருந்து, “ஆம், எங்கள், வெவ்வேறு, நாங்கள், நடிப்பைப், கவிஞரே, புரூரவன், அப்சரா, சிந்துகிறது, சாகேதத்தில்