வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 187
சாகேதத்தின் உத்தியானவனம், சேனாதிபதி புஷ்யமித்திரன் ஆட்சிக் காலத்து ஞாபகச்சின்னம். புஷ்யமித்திரன் இதை நிர்மாணிப்பதற்கு மிகுந்த உழைப்பும் ஏராளமான பணமும் செலவு செய்திருக்கிறான். இப்பொழுது அவனுடைய வம்சத்தாரின் ஆட்சியுமில்லை; சாகேதம் எந்த அரச வம்சத்தின் தலைநகராயுமில்லை; ஆயினும் இந்த உத்தியானவனம் சாகேதத்தின் கௌரவம் என்று கருதி நகரசபை அதை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வருகிறது. 200 வருடங்களுக்கு முன்னால் புஷ்யமித்திரனின் ஆட்சிக் காலத்தைப் போலவே, இன்றும் அதன் அழகும் உபயோகமும் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் மத்தியிலே ஓர் அழகிய குளம் இருக்கிறது. அதனுடைய களங்கமற்ற நீலநிறத்தண்ணீரிலே, வெள்ளை சிவப்புத் தாமரைகள் மலர்ந்திருந்தன. ஜோடி
அன்னங்கள் அவற்றிடையே நீந்தித் திரிந்தன. நான்கு புறமும் வெள்ளைக் கற்களாலான அழகிய படிக்கட்டுகள் அமைந்திருந்தன. அதன் கரைகள் பசிய புற்களால் மூடப்பட்டிருந்தன. பூந்தோட்டமெங்கும் ரோஜா, முல்லை, சம்பங்கி முதலிய மலர்கள் நிறைந்திருந்தன. அசோகமரங்களும் தேவதாரு மரங்களும் வரிசை வரிசையாக நின்றன. அங்கங்கே கொடிகளாலும், மலர்களாலும் ஆக்கப்பட்ட கொடி வீடுகள் காணப்பட்டன. யுவதிகளுக்கும் யுவர்களுக்கும் அந்தக் கொடி வீடுகள் தானே கந்தர்வ உலகம்! வெள்ளைக் கல்லால் நிர்மாணிக்கப்பட்டு பசும் புல் போர்வை போர்த்திய செயற்கைமலை ஒன்றும் அங்கே இருந்து. அழகாகத் தண்ணீரை வாரி இறைக்கும் செயற்கை நீர் ஊற்றுகளும் அங்கங்கே அமைக்கப்பட்டிருந்தன.
தினந்தோறும் பிற்பகலில் அங்குள்ள ஒரு கொடி வீட்டைச் சுற்றிச் சாகேதத்தின் யுவ-யுவதிகளின் கூட்டம் நிறைந்திருக்கும். உள்ளே இடம் கிடைக்காதவர்களே அந்தக் கொடி வீட்டின் வெளியில் நிறைந்திருந்தார்கள். எல்லோரும் மௌனமாகவும் அமைதியாகவும் உட்கார்ந்து கொண்டு கொடி வீட்டிலிருந்து வரும் ஓசையைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். உள்ளே ஒரு கல் மேடை மீது, ஒரு மாதத்திற்கு முன்னால் நீச்சுப் போட்டியிலே கிடைக்கவிருந்த வெற்றியைப் புறக்கணித்து விட்ட அந்த வாலிபன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த ஆடை மிக மெல்லியதாய் இருந்தது. தனது பொன்னிறக் கேசத்தைக் கொண்டையாக உச்சியிலே அள்ளி முடித்திருந்தான். அவன் கையிலே ஒரு மகரயாழ்
இருந்தது. அவனுடைய நீண்ட விரல்கள் அந்த யாழின்மீது அலட்சியமாய்ச் சஞ்சரித்து, அவன் விரும்பியவாறு ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. அந்த வாலிபன் பாதி மூடிய கண்களோடு பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாடல் பிறர் செய்ததல்ல, அவனே இயற்றியது. வசந்த கோகிலம் என்ற அந்த சமஸ்கிருதப் பாட்டு முடிந்ததும், அடுத்து பிராகிருதப்* பாட்டைப் பாட விரும்பினான்; ஏனெனில், அவன் பாடலைக் கேட்பதற்காக அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர், பிராகிருதப்
____________________________________________________
*பிராகிருதம்-சமஸ்கிருதத்திற்கு முந்திய ஆரியபாஷை. அதிலிருந்துதான் சமஸ்கிருதம் முதலிய எல்லா ஆரிய பாஷைகளும் தோன்றின. பிராகிருதம் என்றால் பழைய மூலபாஷை என்றும், சமஸ்கிருதம் என்றால் திருந்திய நாகரிக பாஷை என்றும் பொருள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 187, புத்தகங்கள், கொடி, அந்த, அவன், கங்கை, பக்கம், வால்காவிலிருந்து, சாகேதத்தின், உட்கார்ந்து, அந்தக், உள்ளே, வாலிபன், என்றால், சமஸ்கிருதம், வீடுகள், கொண்டிருந்தான், என்றும், வெள்ளைக், ஆட்சிக், புஷ்யமித்திரன், உத்தியானவனம், சிறந்த, அவனுடைய, முன்னால், முதலிய, அழகிய, இருக்கிறது, அங்கங்கே