வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 186
“அந்த யுவதியை எனக்குத் தெரியும். ஆனால் அந்த வாலிபன் யார்?”
“சுவர்ணாட்சி புத்திரன் அஸ்வகோஷைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா?”
“இல்லை. எங்கள் புரோகிதரின் குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. இவர்களை எல்லாம் தெரிந்து கொள்ள வியாபாரிகளாகிய எனக்கு நேரமெங்கே இருக்கிறது?”
“அடே! அஸ்வகோஷினுடைய கல்வியறிவின் புகழ் சாகேதத்திற்கு வெளியே தூர தூரங்களிலும் பரவியிருக்கிறது. அவன் வேதங்களையும் கலைகளையும் கரை கண்டவன். இது உனக்குத் தெரியாதா?”
“ஆனால் அவனுக்கு வயது இருபத்தி நான்கிற்கு மேல் இருக்காது போலிருக்கிறதே!”
“ஆம்! இந்த இளமையிலேதான், அவன் கல்வியிலே கரை கண்டிருக்கிறான். ஜனங்கள் அவனுடைய கவிதைகளைத் தெருவெல்லாம் முழக்குகிறார்கள்!”
“ஓ! கவி அஸ்வகோஷா? நம்முடைய -யுவ-யுவதிகளின் நாவிலே நடனமாடும் காதல்கீதங்களை இயற்றியவன் இவன்தானா?”
“ஆம்! அதே அஸ்வகோஷ்தான். ஆனால் அந்த யுவதியின் பெயரென்ன?”
“கிரேக்க குலப் பிரமுகரும், கோசல நாட்டின் மிகப் பெரிய வியாபாரியுமான தத்தமித்திரரின் புதல்வி பிரபா.”
“அதனால்தான் அவள் ஈடு இணையற்ற அழகியாய் இருக்கிறாள்.
பார்க்கும்பொழுது. அவளுடைய உடல் மலரினும் மிருதுவாகத் தோன்றுகிறது. ஆனால் நீந்தும் பொழுது எவ்வளவு உறுதியாயிருக்கிறது!”
“அவளது பெற்றோர்கள் ஆரோக்கியமும், திடகாத்திரமும் உடையவர்கள்.”
ஊர்வலம் நகர உத்தியானவனத்தை அடைந்ததும் நீச்சல் போட்டியிலே வெற்றி பெற்ற அஸ்வகோஷும் பிரபாவும், மிக்க மரியாதையோடும் புகழுரைகளுடனும், பொது ஜனங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். ஆரவாரப் புகழுரைகளைக் கேட்ட அவ்விருவரும் ஒருவரையொருவர் நோக்கியபொழுது, அவர்கள் பார்வையிலே கூச்சமும் நாணமும் கலந்திருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 186, புத்தகங்கள், அவர்களின், பக்கம், வால்காவிலிருந்து, அந்த, கங்கை, எனக்குத், அவன், “ஆம், ஊர்வலம், சிறந்த, எல்லாம், ஒருவரையொருவர்