வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 180
“நான் உதவி செய்யவா?”
“ரொம்ப வந்தனம்.”
இப்பொழுது அலங்காரம் செய்வது அவனுக்கு எளிதாக முடிந்தது. ஆனால், மகிழ்ச்சி பொங்கும் அவனுடைய முகத்தைப் பார்ப்பதற்குச் சோபியாவுக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவள் அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு,
“முதலில் கண்ணாடியிடம் வந்து உன்னுடைய புதிய வேஷத்தைப் பார்த்துக் கொள்.”
“நீ பார்த்துவிட்டாயல்லவா? அதுவே எனக்குப் போதும். பார்ப்பதற்குக் கண்ணியமாக இருக்க வேண்டும். அவ்வளவுதானே?”
“எனக்குப் பார்க்க ரொம்ப நன்றாகவே இருக்கிறது. இருந்தாலும், நீயும் ஒருமுறை பார்த்துக் கொள்வதில் கெடுதி ஒன்றும் இல்லையே?”
சோபியா, நாகதத்தனைக் கண்ணாடிக்கு முன்னே நிறுத்தினாள். அவனும் தன்னுடைய ஆடைகளையும் அலங்காரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் சோபியா மாலையைக் கையில் எடுத்துக் கொண்டு,
“என்னுடைய காதலனுக்காக இந்த மாலையைத் தொடுக்கச் செய்தேன்.”
“ரொம்ப நல்ல மாலை, சோபியா!”
“ஆனால் அவருக்கு எப்படி இருக்குமோ, யார் கண்டது?”
“ஏன், ரொம்பத் திருப்தியாய்த்தானிருக்கும்.”
“அவருடைய கூந்தல் பொன்னிறம். ஆனால் இதுவோ சிவந்த ரோஜாப்பூ மாலை.”
“மிக மிக அழகாயிருக்கும்.”
“கொஞ்சம் உன்னுடைய தலையிலே சூட்டிப் பார்த்துக் கொள்ளலாமா?”
“அது உன்னுடைய விருப்பம். என்னுடைய கூந்தலுங்கூடப் பொன்னிறந்தான்.”
“அதனாலேயே எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ள விரும்புகிறேன்.”
மாலையை நாகதத்தன் தலையிலே சூட்டி ஒருமுறை பார்த்தாள். பிறகு அவனைக் கண்ணாடியிலிருந்து மறுபுறம் திரும்பச் சொல்லி,
“நீ இன்று என்னுடைய காதலனைப் பார்க்கப் போகிறாய். நாகா! இப்பொழுதே இங்கே பார்!”
நாகதத்தன் மறுபுறம் திரும்பினான். சோபியாவினுடைய கைவிரல் கண்ணாடியில் அவனுடைய பிரதிபிம்பத்தைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தது. அவளுடைய கண்கள் ஆனந்தக் கண்ணீரை உகுத்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 180, புத்தகங்கள், பார்த்துக், சோபியா, பக்கம், அவனுடைய, உன்னுடைய, கங்கை, வால்காவிலிருந்து, தலையிலே, என்னுடைய, நாகதத்தன், மறுபுறம், எப்படி, மாலை, கொண்டு, ஒருமுறை, “ரொம்ப, சிறந்த