வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 173
“சோபி! உன்னுடைய பிதாவை நீ மறுபடியும் சந்திக்க முடியவில்லையா?”
“அவர் உயிரோடிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சூறாவளியில்
அகப்பட்ட சருகைப்போல் நாங்கள் ஆகிவிட்டோம். எங்கள் அன்புக்குரிய ஏதென்ஸ் நகரம் அழிந்து போய்விட்டது. அவர் உயிரோடிருந்தாலும், மறுபடியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை.”
“ஏதென்ஸ் மிகப் பெரிய நகரமா, சோபியா?”
“ஆம்; ஒரு காலத்தில் இருந்தது எஜமான்.”
“எஜமான் இல்லை, நாகா என்றே சொல்!”
“நல்லது நாகா; இப்பொழுது அந்த நகரம் பாழடைந்து விட்டது. சக்தி வாய்ந்த தாரயோஷினுடைய பல்லைத் தட்டிய எங்கள் ஜன ஆட்சியை, அயோக்கிய பிலிப் சின்னாபின்னமாக்கி விட்டான்.”
“ஏன் அப்படி ஆகிவிட்டது சோபியா?”
“பாரசீகர்களின் எத்தனையோ தாக்குதல்களை நாங்கள் முறியடித்தோம். ஆயினும், ஏதென்ஸ் நகரத்தின் புத்திமான்களில் சிலர் இப்படியே பாரசீகர்களை நாம் எவ்வளவு காலத்திற்குத் தடுத்துக் கொண்டிருக்க முடியும்? நாமும் ஒரு பெரிய ராஜ்யத்தை ஸ்தாபித்தால்தான் நமது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைக்கத் தொடங்கினர். ஏதென்ஸ் நகரத்திலிருந்தே உதவி கிடைத்திருக்காவிட்டால், பிலிப் ஒரு நாளும் ஜெயித்திருக்க முடியாது.”
“ஓ! தட்சசீலா, நீயும் ஒரு விஷ்ணுகுப்தனைப் பெற்றெடுத்திருக்கிறாயே!”
“தட்சசீலம், விஷ்ணுகுப்தன் இவையெல்லாம் என்ன நாகா?”
“ஆம்; தலைநிமிர்ந்து நிற்கும் என் தட்சசீலம்! -நான் பிறந்த பூமி. கீழ்நாட்டின் ஏதென்ஸ் சக்திசாலியான தாரயோஷையும் அவனுடைய
பிரதிநிதிகளையும் எங்கள் ஜன ஆட்சி எத்தனையோ முறை முறியடித்தது. ஆயினும் என்னுடைய தோழன் விஷ்ணுகுப்தன், ஏதென்ஸ் நகரத்திலிருந்து பிலிப் அரசனுக்கு உதவி கிடைக்கும்படி அந்நகரவாசிகளில் சிலர் எந்தக் கொள்கையை வலியுறுத்தினார்களோ, அதே கொள்கையை உடையவனாய் இருக்கிறான்.”
“தட்சசீலமும் எங்கள் ஏதென்ஸைப்போல் ஜன ஆட்சி நாடா?”
“ஆம், ஜன ஆட்சி நாடுதான். அது மட்டுமா? எங்கள் தட்சசீலத்திலே அடிமை வழக்கம் கிடையாது. அந்தப் பூமியில் கால் வைத்த உடனேயே, அடிமைகளும் சுதந்திரராகி விடுகிறார்கள்!”
“ஓ! கருணை நிறைந்த தட்சசீலமே! அதனால்தான், முதல்நாள் நான் உன்னைச் சந்தித்தபோது அடிமைகளோடு நடந்துகொள்ளும் முறை கூட உனக்குத் தெரியாமல் இருந்ததைப் பார்த்தேன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 173, ஏதென்ஸ், புத்தகங்கள், எங்கள், வால்காவிலிருந்து, பக்கம், “ஆம், நாகா, கங்கை, பிலிப், ஆட்சி, ஆயினும், சிலர், விஷ்ணுகுப்தன், முறை, நான், எத்தனையோ, கொள்கையை, உதவி, பெரிய, நம்பிக்கை, மறுபடியும், சிறந்த, நாங்கள், நகரம், இல்லை, முடியும், சோபியா