வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 171
“வைத்தியரே! தாங்கள் எங்கள் கூடவே பெர்ஸபோலிக்கு வருவீர்களல்லவா? தங்களுடைய மனத்திற்கு விரோதமாக நடந்து கொள்ள
மாட்டேன். ஆனால், நீங்கள் எங்கள் குடும்ப வைத்தியராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.”
நாகதத்தன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தன் அறைக்குப் போய்விட்டான்.
3
உலகத்திலேயே புகழ்பெற்ற ஒரு ராஜ்ஜியத்தின் தலைநகரம் பசுமையும் செழுமையுமில்லாத மொட்டைக் குன்றுகளின் மத்தியிலே, இயற்கைத்தாயின் தரித்திர வடிவமாய் விளங்குமென்று நாகதத்தன் கற்பனை கூடச் செய்யவில்லை. பெர்ஸபோலி மிகப் பெரிய நகரம். ராஜ மாளிகையின் பிரகாசம் பொருந்திய பெரிய பெரிய தூண்களையும் ஆகாயத்தோடு அளாவிய அதன் சிகரங்களையும் பார்த்த உடனேயே, சக்கரவர்த்தியின் செல்வத்தையும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளலாம். நகரின் அமைப்பும் அதே போல் சிறந்து விளங்கியது. ஆனால், இவைகள் யாவும் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை. இயற்கைத் தேவி வேண்டுமென்றே அந்தப் பிரதேசத்தைத் தரித்திரமாக ஆக்கி இருக்கிறாள்.
பெர்ஸபோலி நகரையும் சக்கரவர்த்தியின் வைபவத்தையும் பார்ப்பதற்கு, சக்கரவர்த்தியின் சகோதரி அப்ஷாவின் துணையைவிடச் சிறந்த சாதனம் வேறு எங்கே கிடைக்கப் போகிறது? பெர்ஸபோலிக்கு வந்தபின், நாகதத்தனுக்கு வேண்டிய வசதிகள் பற்றி அரசி மிகுந்த கவனம் செலுத்தினாள். வைத்திய தட்சிணையைப் பற்றி அரசி மிகமிக வற்புறுத்தியதன் பேரில், சோபியாவைத்
தட்சிணையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டான் நாகதத்தன்.
சோபியாவின் அரைகுறைப் பாரசீக பாஷையைப் புரிந்து கொள்வது நாகதத்தனுக்குச் சிரமமாகவே இருந்தது. ஆயினும் அவளுடைய பிரகாசம் பொருந்திய கண்களுக்குள்ளே கூர்மையான அறிவு புதைந்து கிடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்துகொண்டான். சோபியா இப்பொழுது அவனுக்குச் சொந்தமாகி விட்டாள். ஆம்; ஓர் அடிமையாகத்தான். ஆயினும் நாகதத்தன் அவளை என்றும் அடிமையாகக் கருதியதில்லை. நாளடைவில் அவள் பேசும் பாஷையையும் இவனால் புரிந்து கொள்ள முடிந்தது. கிரேக்க எழுத்துக்களையும் நாகதத்தன் கற்றுக் கொண்டான்; சோபியா வெகு பிரயாசையோடு அவனுக்கு ஏதென்ஸ் பாஷையையும் கற்பித்து வந்தாள். ஒரு வருடம் முடிவதற்குள், நாகதத்தன் அந்த பாஷையிலும் நிபுணன் ஆகிவிட்டான். ஒரு நாள் சோபியா அந்த இளம் வைத்தியனிடம் மனப்பூர்வமாய் தன்னுடைய நன்றியைத் தெரிவித்து,
“பாக்கியம் அல்லது விதி என்று சொல்கிறோமே, அதுவும் ஒரு விநோதமான பொருள்தான். உங்களைப் போன்ற உயர்ந்த குணம் படைத்த எஜமானனிடம் அடிமையாகும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நான் எப்பொழு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 171, நாகதத்தன், புத்தகங்கள், பக்கம், புரிந்து, சோபியா, சக்கரவர்த்தியின், பெரிய, வால்காவிலிருந்து, சிறந்த, கங்கை, ஆயினும், கொண்டான், பெர்ஸபோலிக்கு, பாஷையையும், அந்த, அரசி, பற்றி, பிரகாசம், பொருந்திய, பெர்ஸபோலி, கொள்ள, எங்கள்