வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 157
“நாமோ அடிமைகள். நமக்குத் தாய்-தகப்பன் என்ற வாஞ்சையும் இருக்கும் என்பதையே அவர்கள் நினைப்பதில்லையே!” இதற்கிடையில் ஒரு கிழ அடிமை குறுக்கிட்டுப் பேசினான்.
“இவ்வளவு தடபுடல் செய்கிறார்களே, வரவேற்பதற்காக; அவரும் நம்மைப் போல ஒரு தாசியின் மகன்தானே!”
“தாத்தா! யார் அது?”
“அவர்தான் இங்கே வரப்போகிறவர்; கோசல தேசத்து இளவரசர் விதூடபன்.”
“ஆம், சாக்கிய குலத்து மஹாநாமருடைய அந்தக் கிழத்தாசியை நீங்கள் பார்த்ததில்லையா? நம்மைப்போலக் கருப்பாயிருக்கவில்லை அவள். யார் கண்டது, யாராவது சாக்கியருடைய வீரியத்திற்குப் பிறந்திருக்கலாம்.”
“அடேயப்பா, நம்முடைய பெண்கள் என்றால்தான் அவர்களுக்குக் கேள்வி கேட்பாடே இல்லையே.”
“அந்தத் தாசி வயிற்றிலே மஹாநாமருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
நல்ல சிவப்பு நிறம், ரொம்ப அழகு. பார்த்தால் சாக்கியக் குலத்துப் பெண்களைப் போலவே இருக்கும்.”
“ஏன் இராது? தாசிக்குப் பிறந்திருந்தாலும்கூட பெண் குழந்தைகளை அதுவும் அழகாயிருந்துவிட்டால், நம்ம எஜமான்கள் ரொம்பப் பிரியமாக வளர்ப்பார்களே.”
“கோசல தேசத்து அரசர் பிரசேனஜித்தர், சாக்கிய குலத்திலே ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்ள விரும்பினார்; ஆனால் சாக்கியர்களிலே யாரும், தங்கள் பெண்ணைக் கொடுக்க விரும்பவில்லை. சாக்கியர்கள் தங்களை மூன்று லோகத்தார்களுக்கும் உயர்ந்தவர்களாகக் கருதுகிறவர்கள் அல்லவா? ஆனால் பெண் கொடுக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லவும் இவர்களால் முடியவில்லை. அரச கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இதனால் மஹாநாமர் தன்னுடைய தாசிக்குப் பிறந்த இந்தப் பெண்ணை, சாக்கிய குலத்துப் பெண் என்று சொல்லி ஏமாற்றி, ராஜா பிரசேனஜித்தனுக்கு விவாகம் செய்து கொடுத்தார். அந்தப் பெண்ணின் மகன்தான் இன்றைக்கு இங்கே வரப்போகிற இளவரசர் விதூடபன்.”
“சாக்கியர்களைப் போலவே, அவரும் இப்பொழுது நம்மை நசுக்குவார்!”
மேள தாளங்கள் முழங்கின. தாசி புத்திரன் என்று உள்ளுக்குள் வெறுப்பிருந்தால் கூட, சாக்கியர்கள் கோசல தேசத்து இளவரசனை வெகு விமரிசையுடன் வரவேற்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 157, புத்தகங்கள், பெண், பக்கம், சாக்கிய, தேசத்து, வால்காவிலிருந்து, கங்கை, தாசிக்குப், போலவே, குலத்துப், பெண்ணை, விவாகம், சாக்கியர்கள், கொடுக்க, செய்து, அவருக்கு, தாசி, இங்கே, யார், அவரும், கோசல, சிறந்த, குழந்தை, விதூடபன், இளவரசர், இருக்கும்